இந்தியா

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீரில் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

Sinekadhara

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே இருவேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது.

குல்காம் மாவட்டத்தில் உள்ள மிர்ஹாமா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அப்பகுதியை சுற்றிவளைத்தபோது, பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலுக்கு பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில், ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் ஐஜி விஜய்குமார் தெரிவித்தார். அவர்களில் இரண்டு பேர் உள்ளூரை சேர்ந்தவர்கள் என்றும், ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும் தெரியவந்துள்ளது. அதேபோல், அனந்த்நாக் மாவட்டத்தில், நவ்கம் ஷஹாபாத் பகுதியிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இதில் காவலர் ஒருவர் காயமடைந்த நிலையில், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சூடு நடந்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே குளிர்காலத்தை பயன்படுத்தி, இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதை தடுக்க எல்லையில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீரர்கள் கூடுதல் நேரம் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.