இந்தியா

இந்திய ராணுவ முகாமில் பயங்கரவாத தாக்குதல்: மூன்று ராணுவ வீரர்கள் வீரமரணம்

webteam

(கோப்பு புகைப்படம்)

ஜம்மு காஷ்மீரில் இந்திய ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் வீரமரணம் எய்தினர்.

இந்திய நாட்டின் சுதந்திர தினம் எதிர்வரும் நிலையில் இந்திய ராணுவ முகாமிற்குள் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள ரஜோரி பகுதியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் தர்ஹால் என்ற பகுதியில் இந்திய பாதுகாப்பு படையினரின் ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராணுவ முகாமின் எல்லையை கடந்து ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் 2 பேர், திடீரென ராணுவ முகாமின் மீது தாக்குதல் நடத்தினர்.

அந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து இந்திய படையினரால் எதிர் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த பதிலடி தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில், 3 பாதுகாப்பு படை வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தொடர்ந்துப் அந்தப் பகுதியில் பயங்கரவாதிகள் யாரேனும் பதுங்கியுள்ளனரா என பாதுகாப்பு படையினர் சோதனை செய்து வருகின்றனர்.