இந்தியா

சீரடிக்கு புனித யாத்திரை சென்ற 10 பேர் சாலை விபத்தில் மரணம்; மேலும் சிலர் கவலைக்கிடம்

webteam

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று  காலை நடந்த சாலை விபத்தில் பத்து பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்-சின்னர் சாலையில் தனியார் சொகுசு பேருந்து ஒன்று டிரக் மீது மோதியதில் 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் 40 பேர் காயமடைந்தனர். தகவலின்படி, பேருந்தில் இருந்த பயணிகள் அனைவரும் சாய்பாபாவை தரிசனம் செய்வதற்காக சீரடிக்கு சென்று கொண்டிருந்தனர் என்று தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 7 பெண்களும் 3 ஆண்களும் அடங்குவர். காயமடைந்தவர்கள் சின்னார் கிராமின் மருத்துவமனை மற்றும் யஷ்வந்த் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பேருந்தில் இருந்த பயணிகள் தானே மாவட்டத்தில் உள்ள அம்பர்நாத்தில் வசிப்பவர்கள் என்றும், சாய்பாபாவை தரிசனம் செய்வதற்காக சீரடிக்கு சென்று கொண்டிருந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இருந்து 180 கிமீ தொலைவில் உள்ள நாசிக்கின் சின்னார் தாலுகாவில் உள்ள பதரே ஷிவார் அருகே காலை 7 மணியளவில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்

விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.