Mahmood Ali
Mahmood Ali File Image
இந்தியா

“பெண்கள் குட்டை ஆடைகளை அணியும்போதுதான் பிரச்னைகள்”- தெலங்கானா அமைச்சர் மஹ்மூத் அலி சர்ச்சை பேச்சு

Justindurai S

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அமைந்துள்ள கே.வி.ரங்கா ரெட்டி மகளிர் கல்லூரியில் தேர்வு எழுதுவதற்காக மாணவிகள் வந்தனர். அப்போது புர்கா அணிந்து வந்த மாணவிகளை கல்லூரி நிர்வாகம் தேர்வெழுத அனுமதிக்கவில்லை. மாணவிகள் தேர்வு தொடங்கி அரை மணிநேரம் காத்திருந்த நிலையில் புர்காவை அகற்றிய பின்னரே தேர்வு எழுதுவதற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Mahmood Ali

இந்த நிலையில், கே.வி.ரங்கா ரெட்டி மகளிர் கல்லூரியில் புர்கா அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அப்போது அவர் கூறுகையில், “பெண்கள் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு தங்களை ஆடைகளை கொண்டு உடலை மூடி, மறைத்து கொள்ள வேண்டும். பெண்கள் குட்டை ஆடைகளை அணியும்போது அதனால் பிரச்னைகள் ஏற்படுகின்றன.

நாம் மதசார்பற்ற கொள்கையை பின்பற்றுகிறோம். ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் ஆடைகளை அணிவதற்கான உரிமை உள்ளது. ஆனால், ஒருவர் இந்து அல்லது இஸ்லாமிய வழக்கத்தின்படி ஆடைகளை அணிய பழகி கொள்ள வேண்டும். ஐரோப்பிய கலாசார ஆடைகளை பின்பற்றக் கூடாது. நம்முடைய ஆடை கலாசாரங்களை நாம் மதிக்க வேண்டும்” என்று கூறினார்.

கல்லூரியில் புர்கா அகற்றிய சம்பவம் பற்றி தெலங்கானா உள்துறை அமைச்சர் முகமது மஹ்மூத் அலியிடம் மாணவிகளின் பெற்றோர் புகார் அளித்து உள்ளனர். இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முகமது மஹ்மூத் அலி கூறியுள்ளார்.