இந்தியா

விவாகரத்து கோரிய லாலு பிரசாத் மகனை காணவில்லை!

webteam

விவாகரத்துக் கேட்டு மனுதாக்கல் செய்துள்ள பீகார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜ் பிரதாப்பைக் காணவில்லை என்று கூறப்படுகிறது.

லாலு பிரசாத்தின் மகன் தேஜ் பிரதாப் யாதவுக்கும், பிகார் எம்எல்ஏ சந்திரிகாவின் மகள் ஐஸ்வர்யா ராய்க்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. பிகார் தலைநகர் பாட்னாவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்கள் திருமண விழாவில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான், அப்போதைய ஆளுநர் சத்யபால் மாலிக் உட்பட ஏராளமான பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர். திருமண விழாவுக்காக போடப்பட்ட அலங்காரங்களும் பேசப்பட்டன.

திருமணம் ஆகி 6 மாதங்கள் ஆன நிலையில் விவகாரத்து கோரி, தேஜ் பிரதாப் யாதவ் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுதொடர்பான விசாரணையை வரும் 29 தேதி பாட்னா குடும்பநல நீதிமன்றம் விசாரிக்க இருக்கிறது. மனைவிக்கும் தனக்கும் மனப் பொருத்தம் இல்லை என்று அவர் காரணம் கூறியிருந்தார்.

இவர்கள் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தபோதே, இந்தப் பொருத்தம் சரியாக இருக்காது என்று கூறப்பட்டதாக தகவல்கள் வெளியானது. ஏனென்றால் தேஜ் பிரதாப், 11 ஆம் வகுப்போடு படிப்பை முடித்தவர். ஐஸ்வர்யா ராய், டெல்லியில் உள்ள கல்லூரி ஒன்றில் முதுகலை முடித்துள்ளார். இதனால் சரியான பொருத்தமாக இருக்காது என்று அப்போது கூறப்பட்டது. இருந்தும் சிலரின் சமாதானத்தை அடுத்து திருமணம் நடந்தது.

இந்நிலையில் தேஜ் பிரதாப், ’அரசியல் ஆதாயங்களுக்காக திருமணம் செய்து வைத்து என்னை பலிகடா ஆக்கிவிட்டனர்’ என்று பரபரப்பு புகாரைக் கூறியிருந்தார்.

அவர் கூறும்போது, ‘எங்களுக்கு பொருத்தமே இல்லை. இருவரும் வெவ்வேறு பின்னணியில் இருந்து வந்தவர்கள். எங்கள் வளர்ப்பும் கலாசாரமும் வேறுவிதமானது. எனது உணர்வுகளை என் பெற்றோரிடமும் தம்பி மற்றும் சகோதரிகளிடம் சொன்னேன். ஆனால், அதை சீரியசாக எடுத்துக்கொள்ளவில்லை. என் முடிவில் இருந்து இனி பின் வாங்க போவதில்லை. அம்பு எய்யப்பட்டு விட்டது. இனி, பிரதமரே தலையிட்டால் கூட மாறமாட்டேன்.

இந்த திருமணத்தின் மூலம் நானே எனக்கு சிக்கலை அழைத்துவருவேன் என்று நினைத்ததில்லை. இனி பழசை திரும்பி பார்க்க விரும்பவில் லை. சில கட்சித் தலைவர்கள் என் பெற்றோரை சமாதானப்படுத்தி இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைத்தனர். அவர்கள் மற்றும் என் குடும்பத் தினர் சிலரின் அரசியல் ஆதாயத்துக்காக, நான் பலிகடா ஆக்கப்பட்டேன். திருமணத்துக்குப் பிறகு எதிர்பார்த்தது போலவே, எனக்கும் ஐஸ்வர் யாவுக்கும் பலமுறை கசப்பான மோதல்கள் ஏற்பட்டன’ என்று தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, கால்நடை தீவன ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் தனது தந்தை லாலு பிரசாத் யாதவை கடந்த சனிக்கிழமை சந்தித்தார் தேஜ். அதன் பிறகு புத்த கயாவில் உள்ள ராயல் ரெசிடன்சி என்ற நட்சத்திர ஓட்டலில் தங்கியிருதார். இந்நிலை யில் ஞாயிற்றுக்கிழமையில் இருந்து அவர் வீட்டுக்கு வரவில்லை என்றும் அவரைக் காணவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இதுபற்றி எம்.எல்.ஏ குமார் சர்வ்ஜீத் கூறும்போது, ‘சில கட்சிப் பிரமுகர்களுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு உணவின் போது தேஜ் பிரதீப்பை சந்தித்தேன். திங்கட்கிழமை மதியம் பாட்னா செல்வதாக, ஓட்டலில் இருந்து வெளியேறினார். அவர் சோகமாக இருந்தார். குட் பை என்று சொல்லிவிட்டு, வீட்டுக்குச் செல்வதாகச் சொன்னார்’ என்று தெரிவித்தார்.

ஆனால், அவர் வீட்டுக்கு வரவில்லை. இதன் காரணமாக பீகாரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.