பி.டெக் மாணவியை கத்தியால் குத்திவிட்டு 8 வது மாடியில் இருந்து குதித்த 15 வயது மாணவன் உயிரிழந்தான்.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் 61- வது செக்டாரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர், 21 வயது மாணவி. பிடெக் படித்து வரும் இவரது வீடு 8 வது மாடியில் இருந்தது. நேற்று மாலை வீட்டில் தனியாக இருந்தார். பெற்றோர் வெளியில் சென்றிருந்தனர். அப்போது அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 15 வயது மாணவன், அவர் வீட்டுக்குச் சென்றான்.
மாணவியைக் கண்டதும் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரது அடிவயிற்றில் சரமாரியாகக் குத்தினான். இதை எதிர்பார்க்காத மாணவி, அலறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் மாணவியை ஓர் அறைக்குள் தள்ளி, கதவை பூட்டிவிட்டு மற்றொரு அறைக்குள், தான் இருந்து கொண்டு கதவைப் பூட்டிக்கொண்டான். ரத்த வெள்ளத்தில் கிடந்த மாணவியை அவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே மற்றொரு அறைக்குள் பூட்டியபடி இருந்த மாணவனை அங்கு காணவில்லை. தேடினர். அவன் 8வது மாடியில் இருந்து, குடியிருப்பின் பின் பகுதியில் விழுந்து கிடந்தது தெரியவந்தது. அவன் பயத்தில் மேலிருந்து குதித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. அவனை அருகில் உள்ள மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள், அவன் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
எதற்காக இந்த தாக்குதல் நடந்தது என்பது பற்றி அந்த மாணவியிடமும் அவர் பெற்றோரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவனின் பெற்றோர் எதுவும் தெரியவில்லை என்று கூறி வருவதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.