தனது காதலியுடன் மருமகன் பழகியதால் ஆத்திரமடைந்து அவரைக் கொன்று பால்கனியில் புதைத்தவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் கஞ்சம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜய் குமார் மகாராணா. ஐ.டி.ஊழியர். 2012 ஆம் ஆண்டு இவரது காதலிக்கு டெல்லியில் வேலை கிடைத்ததால், தானும் அங்குச் சென்றார். நொய்டாவில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்தார். துவாரகா பகுதியில், ஒரே பிளாட்டில் தாலிகட்டாமல் இருவரும் வசித்து வந்தனர். பிஜய்யின் மருமகன், ஜெய் பிரகாஷ். ஐதராபாத்தில் இருந்த இவர், வேலைக்காக 2015ம் ஆண்டு டெல்லி சென்றார். பிஜய்யுடன் தங்கினார். ஒரே பிளாட்டில் மூன்று பேரும் வசித்தனர்.
இந்நிலையில் தனது காதலியுடன் ஜெய் பிரகாஷ் நெருங்கிப் பழகுவது பிஜய்-க்கு தெரிய வந்தது. இதை அவர் விரும்பவில்லை. இதனால் கோபமடைந்த பிஜய், மருமகனை கொன்று விட முடிவு செய்தார். இவர்கள் மூன்றாவது மாடியில் தூங்குவது வழக்கம். கடந்த 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதி, ஜெய் பிரகாஷ் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தார். அப்போது சீலிங் ஃபேன் மோட்டார் ஒன்று ரிப்பேருக்கு சென்று வந்திருந்தது. அதனைக் கொண்டு, பிரகாஷின் தலையில் அடித்து, கொன்றார் பிஜய். அப்போது காதலி வீட்டில் இல்லை.
பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரது உடலை வெளியே, பால்கனிக்கு தூக்கி வந்தார். ஏற்கனவே செய்திருந்த திட்டத்தின்படி, அங்கு தோண்டி, புதைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல நடந்துகொண்டார். புதைத்த இடம் பளிச்சென்று தெரியும் என்பதால் என்ன செய்யலாம் என்று யோசித்தார். மறுநாள் ஹவுஸ் ஓனருக்கு போன் செய்து, பால்கனியில் செடிகள் நடப்போகிறேன், அனுமதி வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரும் சரி என்றார். அதன்படி அங்கு செடிகளை நட்டார்.
ஒரு வாரம் கழித்து ஜெய் பிரகாஷை காணவில்லை என்று போலீசில் புகார் கொடுத்தார். நண்பர்களுடன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்று அந்த புகாரில் கூறியிருந்தார். இரண்டு மாதங்களுக்குப் பின் அந்த பிளாட்டில் இருந்து காலி செய்த பிஜய், நங்கோலிக்கு குடி பெயர்ந்தார். பின், 2017 ஆம் ஆண்டு ஐதராபாத் சென்றுவிட்டார்.
இதற்கிடையே நொய்டாவில் பிஜய் தங்கியிருந்த பிளாட்டின் உரிமையாளர் விக்ரம் சிங், அதைப் புதுப்பிக்க முடிவு செய்தார். இதற்காகக் குழி தோண்டும் போது, எலும்பு கூடு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். நீலநிற சட்டை, பெட்ஷீட், தலையணை, போர்வை ஆகியவை அந்த எலும்பு கூட்டில் சுற்றப்பட்டிருந்தன. இதுபற்றி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதற்கு முன் வீட்டில் வாடகைக்கு இருந்தவர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது பிஜய் பற்றியும் அவருக்குப் பின் இரண்டு பேர் அந்த பிளாட்டில் வாடகைக்கு வசித்ததும் தெரிய வந்தது. அவர்களது போன் எண்ணில் தொடர்பு கொண்ட போது, பிஜய்யின் எண் மட்டும் கிடைக்கவில்லை. வேலை பார்த்த இடத்திலும் அவர் பற்றி விவரம் தெரியவில்லை. வங்கி கணக்கு உள்பட பலவற்றிலும் பழைய போன் எண் இல்லை.
சந்தேகம் அடைந்த போலீசார் அவரைப் பிடிக்க தனிப்படை அமைத்தனர். பல்வேறு கட்ட விசாரணைக்குப் பிறகு ஐதராபாத்தில் அவரை அமுக்கினர், போலீசார். பின்னர் டெல்லி கொண்டு வந்து விசாரித்த போது, காதலியுடன் நெருங்கி பழகியதால் மருமகனையே கொன்றதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.