இந்தியா

ஜீன்ஸ் போடக் கூடாது என்ற கணவருக்கு கத்திக்குத்து? - மருமகள் மீது மாமியார் பரபரப்பு புகார்!

JananiGovindhan

ஜீன்ஸ் பேண்ட் போடக் கூடாது எனக் கூறியதற்காக தனது 18 வயது கணவனை 17 வயது மனைவி கொலை செய்துவிட்டதாக எழுந்த புகாரில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா பகுதியில் அரங்கேறியிருக்கிறது.

கணவன் மனைவி இடையேயான தகராறில் மூங்கில்கள் அடங்கிய குவியலில் விழுந்த அந்த நபர் கடந்த ஜூலை 16ம் தேதி இறந்ததாக தெரிய வந்திருக்கிறது என ஜம்தாரா பகுதி துணைப்பிரிவு போலீஸ் அதிகாரி ஆனந்த் ஜோதி மின்ஸ் கூறியுள்ளார். ஜார்க்கண்ட்டின் கோபல்புரா கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா ஹெம்ப்ராம் என்ற 17 வயது பெண்ணும், 18 வயதான அந்தோலன் துடுவும் கணவன் மனைவி. இருவருக்குள்ளும் அடிக்கடி தகராறு நடைபெற்று வந்திருக்கிறது.

இப்படி இருக்கையில் கடந்த ஜூலை 12ம் தேதி புஷ்பா 2 புதிய ஜீன்ஸ் பேன்ட்களை வாங்கி வந்திருக்கிறார். இதனைக் கண்ட அந்தோலன் அவரை கண்டிக்கவும் செய்து, திருமணமானவர்கள் ஜீன்ஸ் அணியக்கூடாது எனவும் கூறியிருக்கிறார்.

இதனால் கோபமடைந்த புஷ்பா கணவனிடம் சண்டையிட்டிருக்கிறார். இதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பெரிய சண்டையாக மூண்டிருக்கிறது. 

பின்னர் வெளியே வந்த இருவரும் மீண்டும் சண்டையிட்டிருக்கிறார்கள். அப்போது குடி போதையில் இருந்த அந்தோலன் அங்கே இருந்த மூங்கில் குவியல் அடங்கிய புதரில் விழுந்தார். பிறகு இருவரும் வீட்டுக்குள் சென்றிருக்கிறார்கள்.

இந்த நிலையில், மறுநாள் அந்தோலனின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவரது உறவினர்கள் அந்த நபரை ஜம்தாரா டவுனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கச் சென்ற போது, தன்பட்டில் உள்ள பட்லிபுத்ரா மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரைத்திருக்கிறார்கள்.

இதனையடுத்து அங்கு சேர்த்த பிறகு அந்தோலன் ஜூலை 16ல் இறந்திருக்கிறார். இதனால் கடுமையான கோபத்துக்கும், சோகத்துக்கும் ஆளான அந்தோலனின் தாய், மருமகள் புஷ்பாதான் கத்தியால் குத்தி தன் மகனை கொன்றுவிட்டார் என புகார் கொடுத்திருக்கிறார்.

விசாரித்ததில் சம்பவம் நடந்த கிராமத்தில் எந்த துப்பும் கிடைக்காத போதும் புஷ்பாவை போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் போலீஸ் அதிகாரி மின்ஸ் தெரிவித்துள்ளார்.