அவசர நேரத்தில் ரயில் பயணத்திற்காக கொண்டுவரப்பட்ட தட்கல் டிக்கெட் முன்பதிவு முறை தற்போது பலருக்கும் எட்டாக்கனியாக மாறியுள்ளது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான இந்தியர்கள் சாத்தியமற்ற முயற்சி என அறிந்தும் கூட தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்ய காத்திருக்கிறார்கள்.
தட்கலுக்கு முயற்சிக்கும் 90 விழுக்காடு பேர் பல முறை இணையதள முடக்கம், சர்வர் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளை சந்திக்க நேரிடுகிறது. வெறும் இரண்டு நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்த்துவிடுகிறது என்று பலர் புகார்களை முன்வைக்கின்றனர்.
சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்தால் கிடைப்பதற்கான வாய்ப்பு 85 முதல் 90 விழுக்காடு இருந்த நிலையில், நடப்பாண்டில் அது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவாக நாடு முழுவதும் சுமார் இரண்டரை கோடி போலி கணக்குகள் கண்டறியப்பட்டு, அவை முடக்கப்பட்டுள்ளன. மேலும் மோசடியாக செயல்பட்டு வந்த 70 லட்சம் கணக்குகளை மறுமதிப்பீடு செய்யும் பணியில் ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.
இதைத் தொடர்ந்து ஐஆர்சிடிசி தளத்தில் இ-ஆதார் வெரிபிகேஷன் மூலம் தட்கல் டிக்கெட் பதிவு செய்யும் நடைமுறை கொண்டுவரப்பட இருப்பதாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.
இதன்படி தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்பவர்கள் தங்கள் ஐஆர்சிடிசி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்கவேண்டியிருக்கும். டிக்கெட் முன்பதிவு செய்யும் முன் ஆதாருடன் இணைக்கப்பட்ட செல்போன் எண்ணுக்கு ஓடிபி அனுப்பப்பட்டு விவரங்கள் சரிபார்க்கப்படும். இதன்பின்பே டிக்கெட் முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படும். இந்த நடைமுறை ஜூலை 1 ஆம்தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.