இந்தியா

ஏர் இ்ந்தியாவை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் மற்றும் 'ஸ்பைஸ் ஜெட்' அஜய் சிங்

JustinDurai
ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் நிறுவனம் களமிறங்கியுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத் தலைவர் அஜய் சிங்கும் தனிப்பட்ட முறையில் ஏர் இந்தியாவை வாங்குவதற்கான விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில் அதை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு விருப்பம் தெரிவிப்பதற்கான அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஏர் இ்ந்தியாவை வாங்கும் போட்டியில் டாடா சன்ஸ் நிறுவனமும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங்கும் தொகைகளை குறிப்பிட்டு விண்ணப்பித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அஜய் சிங் தனது நிறுவனம் வாயிலாக அல்லாமல் தனிப்பட்ட முறையில் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.
எனினும் ஏர் இந்தியாவை வாங்க மேலும் சில நிறுவனங்கள் போட்டியில் இருப்பதாக விமானப் போக்குவரத்துத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டாடா நிறுவனம் 1932இல் ஏர் இந்தியா நிறுவனத்தை தொடங்கியது. ஆனால் 1953இல் ஏர் இந்தியா தேசியமயமாக்கப்பட்டு அரசு வசம் சென்றது. தற்போது 68 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் இந்தியாவை தன் வசப்படுத்தும் முயற்சியில் டாடா களமிறங்கியுள்ளது.