இந்தியா

மத்திய அரசுக்கு டாடா குழுமம் ரூ.1,500 கோடி நிதியுதவி

jagadeesh

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கு டாடா குழுமம் ரூ.1,500 கோடி நிதியுதவி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்கு தங்களால் இயன்ற நிதியுதவியை தருமாறு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். பேரிடர்களின்போது மக்களைக் காக்க இதுபோன்ற நிதியுதவி உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்க நீண்ட கால அடிப்படையில் தங்களின் நிதியுதவி உதவும் என்றும் இதற்காக அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற நிதியை வழங்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

இதனையடுத்து கொரோனா தடுப்பு பணிகளுக்காக, பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு பாலிவுட் நடிகர் அக்சய் குமார் 25 கோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார். நெருக்கடியான இந்ததருணத்தில் அனைவரும் தங்களால் முடிந்த உதவியை அரசுக்கு செய்ய வேண்டும் என்றும் அக்சய் குமார் கேட்டுக்கொண்டுார்.

இந்நிலையில் டாடா அறக்கட்டளை சார்பில் ரூ.500 கோடி ரூபாயும், டாடா சன்ஸ் குழுமம் சார்பில் ரூ.1000 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது. மொத்தம் ரூ.1500 கோடி கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.