இந்தியா

மாடர்னா கொரோனா தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகம் செய்ய டாடா நிறுவனம் முயற்சி

Veeramani

கோவிட் -19 மாடர்னா தடுப்பூசியை இந்தியாவில் அறிமுகப்படுத்த டாடா நிறுவனம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டாடா குழுமத்தின் சுகாதாரப்பிரிவு அமெரிக்காவின் மாடர்னா நிறுவனத்துடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து டாடா குழுமத்தின் அங்கமான டாடா மருத்துவ மற்றும் நோய் கண்டறியும் பிரிவு, இந்திய அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் உடன் சேர்ந்து பரிசோதனைகளை மேற்கொள்ளும் என தெரியவந்துள்ளது.

மாடர்னா தடுப்பூசியை குளிர்பதன பெட்டியில் சேமித்து வைக்க முடியும் என்பதால் இந்தியா போன்ற நாடுகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

மாடர்னா தடுப்பூசிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்காவில் ஒப்புதல் வழங்கப்பட்டது. ஐரோப்பிய நாடுகள் டிசம்பர் மாதம் ஒப்புதல் வழங்கின. மேலும் மாடர்னா தடுப்பூசி 94.1 சதவீதம் பலன் அளிக்கிறது என்றும், மோசமான பக்க விளைவுகள் இல்லை எனவும் பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய தடுப்பு மருந்துகளை மக்களுக்கு செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் மாடர்னா மருந்தை இந்தியாவில் அறிமுகப்படுத்த முயற்சி செய்து வருகிறது