இந்தியா

பனிச்சரிவில் சிக்கி தமிழக ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழப்பு

webteam

ஜம்மு-காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது தமிழக ராணுவ வீரர்கள் இரண்டு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் உள்ள குரேஷ் ராணுவ முகாம் பகுதியில் இரு வேறு இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் சிக்கி ஏற்கனவே 10 வீரர்கள் உயிரிழந்த நிலையில், இன்று காலை மேலும் 5 வீரர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இதனால் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணந்தங்குடி கிராமத்தைச் சேர்ந்த தமிழக ராணுவ வீரர் இளவரசன் உயிரிழந்ததும் தெரியவந்துள்ளது. விவசாய குடும்பத்தைச் சேர்ந்த 27 வய‌தான அவர், கடந்த ஆறு ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மதுரையை சேர்ந்த சுந்தர்பாண்டி என்ற வீரரும் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது.