இந்தியா

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பீட்டா வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவு

rajakannan

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஏதுவாக மாநில அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தத்திற்கு எதிரான வழக்கை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவது குறித்து உச்சநீதிமன்றம் இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறது. 

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நிரந்தரமாக நடத்தும் வகையில் தமிழக அரசு சட்டத்திருத்த மசோதாவை சட்டமன்றத்தில் நிறைவேற்றியது. இதேபோல் கர்நாடகாவில் பாரம்பரியமாக நடத்தப்படும் கம்பளா எனப்படும், எருது பந்தயத்தை தடையின்றி நடத்துவதற்காக சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. கடந்த ஜனவரியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் இளைஞர்களும், மாணவர்களும் திரண்டு நடத்திய அமைதிப் போராட்டத்தின் விளைவாக, அரசு சட்டத்திருத்தம் கொண்டுவந்தது. 

இந்த சட்டங்களை எதிர்த்து பீட்டா, விலங்குகள் நல வாரியம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்கும்படி உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும், மத்திய அரசின் பொது சட்டங்களை மீறும் வகையில் மாநில அரசுகள் சட்டம் இயற்ற முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். 

அத்துடன், ஜல்லிக்கட்டு அனுமதியை எதிர்க்கும் மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் கடந்தவார விசாரணயின் போது நீதிபதிகள் தெரிவித்தனர். அதனால், விசாரணையை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உத்தரவிடலாமா என்பது பற்றி இன்று உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டதால், ஜல்லிக்கட்டு போட்டியை தொடர்ந்து நடத்துவதில் இதுவரை சிக்கல் இல்லை.