தமிழ்நாட்டின் சட்டமன்றம் அமைந்திருக்கும் புனித ஜார்ஜ் கோட்டை மிகவும் பழமையான தலைமைச் செயலக கட்டடம் ஆகும். இது கடற்கரை அருகே உள்ளது. இந்தக் கோட்டை ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ் அரசின் சரக்கு சேமிப்புக் கிடங்காக இருந்துள்ளது. இந்த வளாகத்தில் உள்ள சட்டமன்றம் இந்தியாவிலேயே அதிக அளவிலான சட்டமன்ற உறுப்பினர்களும் முதல்வர்களும் செயல்பட்ட பாரம்பரியமிக்க கட்டடங்களுள் ஒன்று. மிக நெருக்கடியான சட்டமன்ற வளாகமும் இதுதான்.
தமிழகச் சட்டமன்றத்தின் பழமை
ஜார்ஜ் கோட்டையில் உள்ள பிரதான கட்டடம் 1694இல் கிழக்கிந்திய கம்பெனியால் கட்டப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டை வளாகம் 172 ஏக்கர் பரப்பளவைக் கொண்டது. சட்டமன்றப் பேரவை மண்டபம் 12,000 சதுர அடி பரப்பளவு கொண்டது. 1975இல் இவ்வளாகத்துக்குள் கட்டப்பட்டது நாமக்கல் கவிஞர் மாளிகை. 10 மாடிகளைக் கொண்ட நாமக்கல் கவிஞர் மாளிகை முக்கிய அலுவலகங்களைக் கொண்டது
புதுச்சேரி சட்டமன்றம் 1823இல் பிரெஞ்சுக்காரர்களால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இக்கட்டடம் மருத்துவக் கல்லூரியாகவும் மனநல மருத்துவமனையாகவும் செயல்பட்டுள்ளது. முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோரை மக்கள் எளிமையாக அணுகக் கூடிய வகையில் இந்தச் சட்டமன்றம் உள்ளது. பிரெஞ்சுக் கட்டடக் கலையில் இந்தியாவில் கட்டப்பட்ட ஒரே சட்டமன்றம் இதுதான்.
புதுச்சேரி சட்டமன்ற வளாகம் 1 ஏக்கர் பரப்பளவு கொண்டது புதுச்சேரியின் தலைமைச் செயலகம் தனியாகச் செயல்படுகிறது 10 மீட்டர் உயரம் கொண்ட புதுச்சேரி சட்டமன்றம் 48 அறைகளைக் கொண்டது.
கர்நாடகாவின் சட்டப்பேரவையான விதான சௌதா, பெங்களூருவில் உள்ளது. இது இந்தியாவின் மிக அழகான சட்டமன்றங்களுள் ஒன்று. இது மிகப் பெரிய வளாகத்தில் அமைந்துள்ள மிகவும் விசாலமான சட்டமன்றம் ஆகும். விஜயநகரப் பேரரசின் கட்டடக் கலையையும், நியோ திராவிட கட்டமைப்பையும் இணைத்து கட்டப்பட்ட இந்த சட்டமன்றம் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கிறது.
கர்நாடகச் சட்ட மேலவையும் கீழவை செயல்படும் கட்டடம் 46 மீட்டர் உயரமும் 5 தளங்களும் 51,144 சதுர மீட்டர் தரைப்பரப்பும் கொண்டது கர்நாடகச் சட்டப்பேரவையின் பரப்பு சுமார் 60 ஏக்கர் ஆகும் இந்தச் சட்டப்பேரவை 172 அறைகள் கொண்டது; சட்டப்பேரவை 254 இருக்கைகள் கொண்டது
கேரளத்தின் சட்டமன்றம் நியமசபா மந்திரம் என்று அழைக்கப்படுகிறது. பாரம்பரிய கேரள பாணியையும் நவீன பாணியையும் இணைத்து இது கட்டப்பட்டுள்ளது. கேரள சட்டமன்றத்தில் இருக்கும் நூலகம் இந்திய சட்டப்பேரவை நூலகங்களில் மிகவும் பெரியது.
1979இல் தொடங்கிய இதன் கட்டுமானம் முடிந்து 1998இல் திறந்து வைக்கப்பட்டது 61 மீட்டர் உயரம் கொண்ட இந்த சட்டமன்றத்தின் தரைப்பரப்பு 8,02,453 சதுர அடி ஆகும் பாரம்பரிய கேரளக் கட்டடக் கலை பாணியுடன் நவீன பாணி இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது 140 உறுப்பினர் இருக்கைகளையும் 8 பார்வையாளர் அரங்குகளையும் கொண்டது சட்டமன்ற வரலாற்றை எடுத்துரைக்கும் 2 அருங்காட்சியகங்கள் இங்கே உள்ளன
தெலங்கானா சட்டப்பேரவை இதற்கு முன்பு ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேசச் சட்டமன்றமாக இருந்தது. நிஜாம் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டடம் பாரசீக - ராஜஸ்தானி கட்டடபாணியில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பசுமை சூழ்ந்த இந்த வளாகம் ஹைதராபாதின் அடையாளங்களுள் ஒன்றாக விளங்குகிறது.
1905 தொடங்கிய இதன் கட்டுமானம் 1913இல் நிறைவு பெற்றது பாரசீக-ராஜஸ்தானி பாணிகளின் கலவையாக தெலங்கான சட்டப்பேரவை கட்டப்பட்டது 60,000 சதுர அடியில் அமைந்த இது ஹைதராபாதின் அடையாளமான அரசுக் கட்டிடங்களுள் ஒன்று நிஜாம் ஆட்சிக் காலத்தில் பொதுமக்களின் நிதி உதவியுடன் கட்டப்பட்ட அரசுக் கட்டடம்
ஆந்திர பிரதேசத்திலிருந்து தெலங்கானா பிரிந்த பிறகு ஆந்திரத்தின் சட்டமன்றத்தை தெலங்கானா எடுத்துக்கொண்டது. தற்போது அமராவதியில் உள்ள தற்காலிகக் கட்டடத்தில் ஆந்திர சட்டமன்றம் செயல்பட்டு வருகிறது.
புதிய சட்டமன்றம் 103.76 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது ஏஐ, மெய்நிகர் தொழில்நுட்பம், காகிதம் இல்லா சேவை என மிக நவீன தொழில்நுட்பத்தில் உருவாகிறது. இந்தக் கட்டடம் முழுவதும் பசுமைக் கட்டடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது சட்டப்பேரவைக்குத் தேவையான மின்சாரம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் கிடைக்கும் பேரிடர்களைத் தாங்கும் வகையில் உறுதிமிக்கதாகக் கட்டப்பட்டு வருகிறது.