இந்தியா

கேரள தங்கக் கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவுக்கு ஜாமீன்

webteam

கேரள தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ்க்கு எர்ணாகுளம் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து கேரளாவிற்கு நூற்றுக்கணக்கான கிலோவில் தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்து இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளில் ஒருவராக ஸ்வப்னா என்ற பெண் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். மேலும் 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை , ஸ்வப்னா மீது கருப்புப் பண தடுப்புச் சட்டம் மற்றும் வெளிநாட்டு பணப் பரிவர்த்தனை மேலாண்மைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அவருக்கு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. எனினும் ஸ்வப்னா மீது சுங்கத்துறை சார்பில் காஃபிபோசா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவரது சிறை வாசம் தொடர்கிறது.