இந்தியா

துடைப்பத்தை எடுத்து துப்புரவு செய்த பிரதமர்

rajakannan

தூய்மை சேவை பணியில் நம்மை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

‘தூய்மை இந்தியா’திட்டத்தின் ஒரு பகுதியாக, ‘தூய்மையே சேவை’ என்ற இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். டெல்லியில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அசாமைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த மகளிருடன் தூய்மையின் அவசியம் குறித்தும், இந்த இயக்கத்தின் நோக்கம் குறித்தும் பிரதமர் கலந்துரையாடினார். 

மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்த நாளான அக்டோபர் 2ஆம் தேதி வரை இந்த இயக்கம் தொடர்ந்து செயல்படும் என்றும், தூய்மையின் அவசியம் குறித்து அனைவரிடமும் பரப்புரை செய்யுமாறும் பிரதமர் வலியுறுத்தினார். காந்தியின் கனவை நனவாக்க, நாட்டை தூய்மைப்படுத்துவது அவசியம் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தூய்மையே சேவை இயக்கத்தைத் தொடங்கிவைத்தபின், பிரதமர் மோடி, டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றுக்குச்சென்று அங்கு தூய்மைப்பணிகளை மேற்கொண்டார். பகர்கஞ்ச் பகுதியில் உள்ள பாபா சாகேப் அம்பேத்கர் உயர்நிலைப்பள்ளிக்குச்சென்ற பிரதமர், அங்குள்ள அம்பேத்கர் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். பின்னர், பள்ளி வளாகத்தில் அவரே துடைப்பத்தை எடுத்துக் கொண்டு துப்புரவு செய்தார். ஆங்காங்கே இறைந்து கிடந்த பிளாஸ்டிக் கப்புகள், காகித குப்பைகளை அவர் கைகளாலேயே அள்ளி துப்புரவு செய்தார். 

இந்த நிகழ்வுக்காக வந்த பிரதமருக்காக போக்குவரத்து நிறுத்தப்படாமல், வழக்கமான போக்குவரத்திலேயே பிரதமரின் வாகனமும் இணைந்து கொண்டது. 1946 ஆம் ஆண்டு, டெல்லி தாழ்த்தப்பட்டோர் நல கழகத்தின் கீழ் இயங்கும் இந்தப் பள்ளிக்கான கட்டடத்தை அம்பேத்கரே தனது முயற்சியில் கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.