Modi & Suvendu Adhikari  web
இந்தியா

மேற்கு வங்கம்| புதிய முதல்வராக பதவியேற்றார் சுவேந்து அதிகாரி.. யார் இவர்.?

சமீபத்தில் நடந்த மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது, இதனைத் தொடர்ந்து இன்று (மே 9) சுவேந்து அதிகாரி அம்மாநில முதலமைச்சராக பதவியேற்றார்.

PT WEB

மேற்கு வங்கத்தின் மிட்னாபூரைச் சேர்ந்த சுவேந்து அதிகாரி, மாணவர் பருவத்திலேயே அரசியலில் குதித்தவர். காங்கிரஸில் தொடங்கி, மம்தா பானர்ஜியின் நெருங்கிய துணையாக திரிணமூல் காங்கிரஸில் உயர்ந்தார். நந்திகிராம் போராட்டத்தில் முன்னணி வகித்து இடதுசாரி ஆட்சியை வீழ்த்த உதவினார். பின்னர் மம்தாவுடன் ஏற்பட்ட விரிசலால் பாஜகவில் இணைந்து, இன்று மாநிலத்தின் முதல் பாஜக முதலமைச்சராக பதவியேற்றுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் மத்திய அமைச்சரவையின் பெரும்பான்மையானோர் கலந்துகொண்ட, பிரம்மாண்டமான சக்திக் கண்காட்சியில், சுவேந்து அதிகாரி இன்று (மே9) வங்காளத்தின் முதல் பாஜக முதலமைச்சராகப் பதவியேற்றார்.

Suvendu Adhikari & Mamata Banerjee

யார் இந்த சுவேந்து அதிகாரி?

1970ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் மாவட்டத்தில் ஒரு செல்வாக்குமிக்க அரசியல் குடும்பத்தில் பிறந்தவர் சுவேந்து அதிகாரி. இவரது தந்தை சிசிர் அதிகாரி முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தவர் என்பதால், இயல்பாகவே அரசியல் ஆர்வம் கொண்ட சுவேந்து, மாணவர் பருவத்திலேயே அரசியலில் நுழைந்தார். ஆரம்பத்தில் காங்கிரஸ் கட்சியில் தனது பயணத்தைத் தொடங்கிய இவர், பின்னர் மம்தா பானர்ஜியுடன் இணைந்து திரிணமூல் காங்கிரஸின் முக்கியத் தூணாக மாறினார்.

2007இல் நந்திகிராம் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று செயல்பட்ட சுவேந்து அதிகாரி, இடதுசாரி ஆட்சியை வீழ்த்தி மம்தா ஆட்சிக்கு வர பெரும் பலமாக இருந்தார். மம்தாவின் நம்பிக்கைக்குரிய தளபதியாக விளங்கிய இவர், திரிணமூல் காங்கிரஸில் அமைச்சராகவும், மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார்.

Suvendu Adhikari

பின்னர், மம்தாவின் மருமகன் அபிஷேக் பானர்ஜிக்குக் கட்சியில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாலும், கட்சியின் முடிவுகளில் தனது சுதந்திரம் பறிக்கப்பட்டதாலும் மம்தாவுடன் விரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாக, 2020இல் பாஜகவில் இணைந்த சுவேந்து அதிகாரி, மம்தாவிற்கு எதிராக களம் இறங்கினார். 2021இல் நந்திகிராமிலும், 2026இல் பவானிப்பூரிலும் மம்தாவை நேரடியாக வீழ்த்தி, தற்போது மாநிலத்தின் முதல் பாஜக முதல்வராக உயர்ந்துள்ளார்.