தொழுநோயை காரணமாக கூறி விவாகரத்து செய்வது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் இந்த முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. அதன்படி இனி தொழுநோயை காரணம் காட்டி விவாகரத்து செய்ய முடியாது. இத்தோடு பல முக்கிய வழிகாட்டு நெறிமுறைகளையும் உச்சநீதிமன்றம் அரசுக்கு வழங்கியுள்ளது.
தொழுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு நாடு முழுவதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. பள்ளிகளில் தொழுநோய் பாதித்த குழந்தைகளை தனிமைப்படுத்தாமல் அனைவரையும் போலவே நடத்த வேண்டும், இதற்கு மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும் தொழுநோயாளிகள் நலனுக்காக இருக்ககூடிய அத்தனை நலத்திட்டங்களும் முழுமையாக செயல்படுத்த வேண்டும் எனக் கூறியுள்ள நீதிமன்றம், தொழுநோயாளிகள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவது எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல எனத் தெரிவித்துள்ளது. தொழுநோயாளிகளும் மற்றவர்களை போல சராசரி வாழ்க்கை வாழ உரிமை படைத்தவர்கள் என்றும் கூறியுள்ளது.
தொழுநோயாளிகளுக்கு தனியாக மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ் வழங்க முடியுமா என்பதை மத்திய அரசு ஆராய வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தொழுநோயாளிகளுக்கு மருத்துவமனையில் பாகுபாடு காட்டக்கூடாது என்றும், அவர்களுக்கு வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கான அட்டையை வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.