சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 6 முதல் 9ம் வகுப்புகளுக்கு மும்மொழிக் கொள்கையை இவ்வாண்டு முதல் அமல்படுத்தவுள்ளதாக சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிவித்தது. இதற்கு இந்திய அளவில் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், சி.பி.எஸ்.இ நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய் மால்யா பக்ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டு மொழி ஒன்றைப் படித்து வரும் மாணவர்கள் திடீரென்று அதனை விட்டு, முன்னர் படிக்காத இந்திய மொழிக்கு மாறுவது மாணவர்களை கடுமையாக பாதிக்கும் என்றும், வேலை வாய்ப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு மாணவர்கள் ஆங்கிலத்தோடு கூடுதலாக ஒரு வெளிநாட்டு மொழியைப் படிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது.
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், ஆங்கிலம் பல நூற்றாண்டாக நம் வரலாற்றிலும் சமூகத்திலும் ஆழமாக வேரூன்றியுள்ளது. பல இந்திய மாநிலங்களில் ஆங்கிலமே அதிகாரப்பூர்வ மொழியாகவும் உள்ளது. அப்படி இருக்கும்போது அதை எவ்வாறு அந்நிய மொழியாகக் கருத முடியும்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும், 23 இந்திய மொழிகளில் கற்பிக்க கொள்கை அளவில் அனுமதி இருந்தாலும், அதற்குத் தேவையான தகுதியான ஆசிரியர்களும், பாடப்புத்தகங்களும், உள்கட்டமைப்பும் உண்மையில் எத்தனை சி.பி.எஸ்.இ பள்ளிகளில் உள்ளன என்ற விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
அதோடு, புதிய மும்மொழிக் கொள்கை அவசரமாக அமல்படுத்தப்படுவதால் மாணவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்றும், ஏற்கனவே ஒரு குறிப்பிட்ட மொழியைக் கற்றுக்கொண்டிருக்கும் 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இதிலிருந்து விலக்கு அளித்து, அடுத்த கல்வியாண்டிலிருந்து இதை நடைமுறைப்படுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு அரசிடம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். .