இந்தியா

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம்: சிபிஐ வழக்கில் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்

webteam

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரம் தொடர்பாக, ப.சிதம்பரத்தை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் ஆகஸ்ட் 21-ஆம் தேதி கைது செய்தனர். அவர், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார், அவரது ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 30-ஆம் தேதி நிராகரித்து விட்டது. 

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது, ஜாமீன் மனு மீதான தீர்ப்பை செவ்வாய்க்கிழமைக்கு (அக்.22) நீதிபதிகள் ஒத்திவைத்தனர். அதன்படி இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.  விசாரித்த நீதிபதிகள், ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் என்றும், வெளிநாடு செல்லக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சிபிஐ தொடர்ந்த வழக்கில் ஜாமீன் கிடைத்தாலும் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவரால் சிறையில் இருந்து தற்போது வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.