இந்தியா

அமலாக்கத்துறை வழக்கில் ஜாமீன் - சிறையிலிருந்து விடுதலையாகிறார் ப.சிதம்பரம்

rajakannan

ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பான அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை கடந்த அக்டோபர் 16ம் தேதி கைது செய்தது. இதையடுத்து ப.சிதம்பரம் தொடர்ந்த ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்திருந்தார். 

இம்மனு மீதான விசாரணை முடிந்துள்ள நிலையில், நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு இன்று ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. முன்னதாக, சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் அக்டோபர் 22ம் தேதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியிருந்தது. தற்போது, அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கிலும் ஜாமீன் கிடைத்துள்ளதால் அவர் திகார் சிறையில் இருந்து வெளியே வரவுள்ளார். அவர் மொத்தம் 106 நாட்கள் சிறையில் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.