இந்தியா

ப.சிதம்பரத்திற்கு விதித்துள்ள நிபந்தனைகள் என்னென்ன?

webteam

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதாகி 106 நாட்கள் சிறையில் இருந்த ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

ஐ.என்.எக்ஸ் முறைகேடு தொடர்பாக சிபிஐ தரப்பில் தொடரப்பட்ட வழக்கில் அக்டோபர் 22ம் தேதி உச்ச நீதிமன்றம் சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியிருந்தது. ஆனால் அமலாக்கத்துறையும் சிதம்பரத்தை கைது செய்ததால் அவர் சிறையில் இருக்க நேரிட்டது. 

இதைத்தொடர்ந்து ப.சிதம்பரம் தொடர்ந்த ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துவிட்ட நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.  அதில் இன்று உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜாமீனையொட்டி ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன என்று பார்க்கலாம். 

1. சாட்சிகளை கலைக்கவோ, ஆதாரங்களை அழிக்கும் முயற்சியிலோ ஈடுபடக்கூடாது. 

2. ப.சிதம்பரம் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். 

3. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு குறித்து ப.சிதம்பரம் பேட்டி தரவோ, அறிக்கை விடவோ கூடாது.

4. அனுமதியின்றி ப.சிதம்பரம் பயணம் மேற்கொள்ளக்கூடாது. 

5. வழக்கின் விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைப்பு தரவேண்டும்.