சிறையிலிருந்து விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஷ்வரராவ் அமர்வு `பேரறிவாளனை ஏன் விடுவிக்கக் கூடாது?’ என்பன உள்ளிட்ட சில கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இன்று உச்சநீதிமன்ற விசாரணையின்போது, `பேரறிவாளன் விவகாரத்தில் இன்னும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருக்கிறார். உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் காரணமாக பேரறிவாளன் தற்போது சிறை விடுப்பில் இருக்கிறார். பேரறிவாளன் விவகாரத்தில் ஆளுநரின் பதில் ஒவ்வொரு முறையும் முரணாகவே உள்ளது. அமைச்சரவையின் ஒவ்வொரு முடிவுக்கு எதிராகவும் மாநில ஆளுநர் செயல்பட்டால் கூட்டாட்சி கட்டமைப்புக்கு மிகப்பெரிய பாதகமாக அமையும். சொந்த கண்ணோட்டத்தில் செல்ல ஆளுநருக்கு அதிகாரமில்லை.
மாநில அமைச்சரவை அனுப்பக்கூடிய பரிந்துரைகளை, குடியரசுத்தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு என்ன அதிகாரம் உள்ளது? ஆகவே பேரறிவாளனை விடுவிப்பது தொடர்பான தனது நிலைப்பாட்டை மத்திய அரசு ஒரு வாரத்தில் தெரிவிக்க வேண்டும். அத்துடன் பேரறிவாளன் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தமிழக அரசு வழக்கறிஞர்கள் ஒருவாரத்தில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்..
பேரறிவாளனை யார் விடுவிக்க வேண்டும் என்பதில் உள்ள சிக்கல்களில், ஏன் அவரேவும் சிக்க வேண்டும்? இதையெல்லாம் தவிர்க்க, ஆளுநர், குடியரசுத் தலைவர், அதிகாரம் குறித்த விஷயங்களுக்கு போகாமல் பேரறிவாளனை நாங்கள் ஏன் விடுவிக்கக் கூடாது? பேரறிவாளனை நாங்களே விடுவித்து இந்த வழக்கை முடித்துவைக்க ஒரே தீர்வு என கருதுகிறோம்’ என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
தொடர்புடைய செய்தி: “கோட்சேவே 14 ஆண்டுகளில் வெளியே வந்துவிட்டார்”-பேரறிவாளன் வழக்கில் காரசார வாதம்-முழுவிவரம்