இந்தியா

பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட உள்ள சூப்பர் மாடல் அஷ்ரா படேல்

EllusamyKarthik

குஜராத் மாநிலத்தில் விரைவில் பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பிரதிநிதிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மும்பையில் சூப்பர் மாடலாக வலம் வரும் அஷ்ரா படேல் என்ற பெண் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். 

இந்த தேர்தலில் போட்டியிட விரும்பும் அவர் தான் சார்ந்துள்ள மாடலிங் துறையில் இருந்து சில நாட்கள் விலகி இருக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளாராம். பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள கவிதா கிராமம்தான் அஷ்ரா படேலின் சொந்த கிராமம். தற்போது அந்த கிராமத்தில்தான் அவர் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அந்த பகுதியில் பொது பிரிவை சேர்ந்த பெண் ஒருவர் அந்த பதவிக்கு போட்டியிடுவது இதுவே முதன்முறை என சொல்லப்பட்டுள்ளது. 

“கொரோனா ஊரடங்கு காலத்தில் நான் எனது கிராமத்தில் தங்கி இருந்தேன். எங்கள் கிராமத்தில் நிறைய மக்கள் போதுமான விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலும், நிதி சிக்கல் காரணத்தாலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். 

அதை பார்த்த நான் எனது கிராமத்து மக்களுக்கு என்னால் ஏதேனும் மாற்றம் கொண்டுவர வேண்டுமென விரும்பினேன். அதன்படி தற்போது தேர்தலில் போட்டியிட உள்ளேன். எனது கிராமத்தை வளர்ச்சி பெற செய்வதுதான் எனது நோக்கம்” என தெரிவித்துள்ளார் அவர்.