இந்தியா

சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்படும் பாதுகாப்புகள் என்ன ? ஆந்திர அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

webteam

ஆந்திராவின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்த விவரங்களை தெரியப்படுத்துங்கள் என ஆந்திர அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவின் முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. மாவோயிஸ்ட்களின் கொலை மிரட்டல் காரணமாகவும், செம்மரக்கடத்தல் வியாபாரிகளின் மிரட்டல் காரணமாகவும் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.  

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு சந்திரபாபு நாயுடுவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டது. அவரது மகனுக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. பாதுகாப்பு குறைக்கப்பட்டது குறித்து சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆந்திர உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு இன்று நீதிபதி துர்கா பிரசாத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சுப்பாராவ், '' சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மாநில அரசு வேண்டுமென்றே குறைத்துவிட்டதாக குற்றம் சாட்டினார். மேலும் சந்திரபாபு நாயுடுவுக்கு மாவோயிஸ்ட் மற்றும் செம்மரக்கடத்தல் வியாபாரிகள் மூலம் கொலை மிரட்டல் கொடுக்கப்பட்டதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவருக்கு பதிலளித்த ஆந்திர அரசு வழக்கறிஞர் சுப்ரமணியம் ஸ்ரீராம்,  ''எதிர்க்கட்சி தலைவருக்கு கொடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பைவிடவும் அதிக பாதுகாப்பு சந்திரபாபு நாயுடுவுக்கு கொடுக்கப்படுகிறது. 74 பாதுகாப்பு வீரர்கள் வேறு வேறு நேரங்களிலும், வெவ்வேறு இடங்களிலும் பாதுகாப்பு பணியில் உள்ளனர். குண்டு துளைக்காத வாகனம், செல்போன் ஜாமர் வாகனங்களும் பாதுகாப்பு பணியில் உள்ளன'' என தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்த முழு விவரத்தையும் ஜூலை 9க்குள் தெரியப்படுத்துங்கள் என ஆந்திர அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.