சு.வெங்கடேசன் MP
சு.வெங்கடேசன் MP PT
இந்தியா

“பொய் உங்கள் ஆயுதம். உண்மையே எங்களின் கவசம்”- மலக்குழி மரண குற்றச்சாட்டுக்கு சு.வெங்கடேசன் MP பதில்

PT WEB

மதுரை மாவட்டத்தில் உள்ள பெண்ணாடம் என்ற பேரூராட்சியில் மலக்குழி மரணம் நிகழ்ந்தது என்றுகூறி, இதற்கு காரணம், கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் நிகழ்ந்தது என்றும் இவ்விஷயத்தில் சு.வெங்கடேசன் MP கள்ளமெளனம் காக்கிறார் என்றும் மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் மற்றும் ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் கூறினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கம்யூனிஸ்ட் எம்.பி சு.வெங்கடேசன், இன்று அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதன் விவரங்கள் இங்கே:

“ஒரு பொய்யை உண்மையாக்க ஒன்றிய நிதி அமைச்சர், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் என எல்லோரும் களம் இறங்கி உள்ளனர். மலக்குழி மரணங்களுக்கு எதிராக பிணவறைகள் முன்பும், காவல் நிலையங்களில் வழக்கு பதியக்கோரியும் தொடர்ந்து களம் காண்கிற அமைப்பு மார்க்சிஸ்ட் கட்சி.

எம்.பி. சு.வெங்கடேசன் அறிக்கை

மனிதக் கழிவை மனிதர் அகற்றும் கொடுமைக்கு முடிவு கட்ட இயந்திர பயன்பாட்டைக் கொண்டு வர என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டிய ஒன்றிய அரசின் முக்கியத் துறை அமைச்சர்கள் சமூக வலைதளத்தில் பொய்யை, பீதியை பரப்புகிற ஒருவருக்காக இவ்வளவு அக்கறை எடுத்து, நேரம் செலவழிக்கிறது. இது உண்மைக்கும் இவர்களது அரசியல் நோக்கத்திற்கும் எவ்வளவு பெரிய இடைவெளி உள்ளது என்பதையே காட்டுகிறது.

ஒரு நிதி அமைச்சருக்கு அப்படி ஒரு பேரூராட்சி மதுரை மாவட்டத்தில் இருக்கிறதா என்று கூட பார்த்து விட்டு கருத்துக்கூற முடியாதா? இன்னொருவர் தகவல் தொழில் நுட்ப அமைச்சர். அந்த இலாகாவை "பொய் மற்றும் அவதூறு தகவல் தொழில் நுட்ப அமைச்சர்" என்று மாற்றி விடலாமா?

முழுவதும் வதந்தியால் உருவாக்கப்பட்டுள்ள இந்த செய்தியை சுற்றுக்கு விடுவது சமூகப் பதட்டத்தை உருவாக்கும் என்பதுதான் பிரச்னை. ஆகவே இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புகார் கொடுத்தது.

இதில் வேடிக்கை என்னவெனில் கருத்து சுதந்திரம் பற்றி ஒன்றிய அமைச்சர்கள் பேசி இருப்பதுதான். உலகில் இணையதள முடக்கம் செய்வதில் ஐந்து ஆண்டுகளாக முதல் இடத்தில் இந்தியாவை வைத்திருப்பவர்கள் இவர்கள். கோவிந்த பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மிதந்த போதெல்லாம் கருத்து சுதந்திரம் பற்றி கவலைப்படாதவர்கள் ஒரு போலிச் செய்தி நபருக்கு ஆதரவாக வருவதுதான் நகை முரண்.

பொய் உங்கள் ஆயுதம். உண்மையே என்றும் எங்களின் கவசம்” என்றுள்ளார்.