பிரதமர் மோடி - சு. வெங்கடேசன் web
இந்தியா

’இரவில் வீடியோ வெளியிட்ட மோடி..’ அமைச்சரை காப்பாற்றும் முயற்சி என சு.வெங்கடேசன் விமர்சனம்!

டெல்லி மாணவர்கள் போராட்டம் குறித்து நள்ளிரவில் பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டிருக்கும் நிலையில், அதை விமர்சித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்.

Rishan Vengai

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் போராட்டம், காவல்துறை தடியடி, கண்ணீர் புகை குண்டு தாக்குதல் என பதற்றம் சூழ்ந்த நிலையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உயரும் தருணத்தில், நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு, வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா, விரைவு நீதிமன்றம், கடுமையான தண்டனை குறித்து அறிவித்த மோடியை, மாணவர் போராட்டத்தை ஒதுக்கி, அமைச்சரை காப்பாற்றும் முயற்சி என சு.வெங்கடேசன் கடுமையாக விமர்சிக்கிறார்.

நீட் தேர்வு முறைகேட்டிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என டெல்லி ஜந்தர் மந்தரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட ஒரு மாதமாக நடந்துவரும் இப்போராட்டம் மாணவர்கள், காவல்துறையினர் இடையேயான மோதலாக மாறியது. இளைஞர்கள் மீது டெல்லி காவல்துறை நடத்திய தடியடி மற்றும் கண்ணீர் புகை குண்டுகள் வீசுதல் போன்ற தாக்குதலால், 6 வயது சிறுவன் உட்பட 100-க்கு மேற்பட்ட இளைஞர்கள் காயமடைந்தனர்.

cjp protest in delhi

இந்த சம்பவம் டெல்லி மட்டுமின்றி இந்திய அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கும் சூழலில், டெல்லி மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் மாணவர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

மத்திய அரசு மற்றும் காவல்துறையின் செயல்பாடுகளுக்கு பல தரப்பிடமிருந்து கண்டனங்கள் இருந்துவரும் நிலையில், பிரதமர் மோடி நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு பேசியிருந்தார். இந்நிலையில் பிரதமரை விமர்சித்துள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன்.

மோடி சொன்னது என்ன?

நள்ளிரவில் வீடியோ வெளியிட்டிருந்த பிரதமர் மோடி, “வினாத்தாள் கசிவு ஒரு சாதாரணப் பிரச்சனை அல்ல என எனக்கு தெரியும். இந்த விஷயம், லட்சக்கணக்கான மாணவர்களுக்கும் அவர்களது பெற்றோருக்கும் பெரும் வேதனையை கொடுத்துள்ளது. இதை உணர்ந்ததால்தான், இவ்விவகாரத்தில் கடந்த இரண்டரை மாதங்களாக பல குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வினாத்தாள் கசிவு சர்ச்சையின் காரணமாக எந்தவொரு மாணவரும், தனது ஒரு வருடத்தை இழந்துவிடக்கூடாது என்றே நாங்கள் நினைத்தோம். அதை உறுதி செய்வதே அரசின் முன்னுரிமையாக இருந்தது. அதனால்தான் நம் அரசு தனது அதிகபட்ச அதிகாரத்தை பயன்படுத்தி, மிகவும் குறுகிய காலத்தில் சுமார் 22 லட்சம் மாணவர்களுக்கான மறுதேர்வை நடத்தி முடித்தது. சில தினங்களுக்கு முன் தேர்வு முடிவுகளும் வெளிவந்துள்ளன. இதனால் நாடு முழுவதுமுள்ள மாணவர்கள் மகிழ்ச்சியடைந்தாலும்கூட, நாம் இத்துடன் திருப்தியடைந்து விடக்கூடாது. எனவே தான் விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய வரைவுச் சட்டத்தைத் தயாரிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.

அதிகாரிகளும் அயராது உழைத்து, ‘வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா’ தொடர்பான ஒரு வரைவுத் திட்டத்தை என்னிடம் சமர்ப்பித்துள்ளனர். விரைவு நீதிமன்றங்கள் மற்றும் கடுமையான தண்டனைகளுக்கான விதிகளை உள்ளடக்கிய இந்த வரைவு, நாளை அமைச்சரவையில் விவாதிக்கப்படும். அமைச்சர்களின் ஆலோசனைகளுக்குப் பின் நாளையே இறுதி செய்யப்படும். வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இரண்டாவது வாரம் தொடங்கிய பின்னர், கூடிய விரைவில் இந்த மசோதாவை அவையில் நிறைவேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

இரவெல்லாம் பணியாற்றும் பிரதமர்..

பிரதமர் மோடி வீடியோ வெளியிட்டிருப்பதை விமர்சித்திருக்கும் எம்பி சு.வெங்கடெசன், “வினாத்தாள் கசிவு குறித்து முடிவெடுக்க நாளை அமைச்சரவைக் கூட்டம் கூடும், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இது குறித்து சட்டம் நிறைவேற்றப்படும்” என்றும் நள்ளிரவில் அறிவித்துள்ளார் பிரதமர்.

“அப்படியொரு மசோதா வரும் முன்பு தர்மேந்திர பிரதானின் ராஜினாமா கசியட்டும்” என கிண்டலடித்துள்ளது CJP.

பொறுப்பேற்பில் இருந்து தப்பிக்கவும், அமைச்சரைக் காப்பாற்றவும் இரவெல்லாம் பணியாற்றும் பிரதமர் அவர்களே!

இன்னும் எத்தனை நாள் குறுக்குவழியை மட்டுமே தேர்வு செய்வீர்கள்? நேர்வழி ஒன்றிருக்கிறது. அந்த வழியில் நடக்க சொல்கிறார்கள் மாணவர்கள்” என விமர்சித்துள்ளார்.