model image freepik
இந்தியா

கேரளா | பிறப்புறுப்பில் காம்பஸால் குத்திக் கொடுமை.. ஜூனியர்களை ராகிங் செய்த சீனியர்கள்!

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு நர்ஸிங் கல்லூரியில் பயிலும் சீனியர்கள், ஜூனியர் மாணவர்களின் பிறப்புறுப்பைக் கொடுமைப்படுத்திய விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

Prakash J

கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள அரசு நர்ஸிங் கல்லூரியில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 3 மாணவர்கள் முதலாம் ஆண்டு படித்துள்ளனர். இந்த மூவரைத்தான் இறுதியாண்டு படிக்கும் 5 மாணவர்கள் உடல் மற்றும் மனரீதியாகக் கொடுமைப்படுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கடந்த 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் சுமார் 3 மாதங்களாக, 5 மாணவர்கள் சேர்ந்து தங்களை தொடர்ச்சியாக கொடுமைப்படுத்துவதாக அந்த புகாரில் தெரிவித்துள்ளனர். புகாரை அடுத்து அந்த 5 மாணவர்களையும் கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ள நிலையில், அவர்கள் அனைவரையும் ராகிங் தடுப்புச் சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்

இதுதொடர்பாக போலீசார் தரப்பில் இருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து அவர்கள், ”சீனியர் மாணவர்கள், ஜூனியர் மாணவர்களை நிர்வாணமாக நிற்கவைத்து அவர்களின் பிறப்புறுப்பில் டம்பிள்ஸை தொங்கவிட்டு கொடுமைப்படுத்தி உள்ளனர். ஜாமிண்ட்ரி பாக்ஸில் உள்ள காம்பஸ் மற்றும் சில கூர்மையான பொருள்களைக் கொண்டு அவர்கள் காயப்படுத்தப்பட்டு உள்ளனர்.

அத்துடன் நிற்காமல், அவர்களுக்கு மேலும் வலியை ஏற்படுத்தும் வகையில் காயங்களில் சில கிரீம்களைத் தடவி உள்ளனர். அதன் வலியால் துடித்து காயமடைந்த மாணவர்கள் சத்தம் போட்டுள்ளனர். அப்போது அவர்களின் வாயில் அந்த கிரீம்களை திணித்துள்ளனர். இந்த கொடூரச் செயல்களை அந்த சீனியர் மாணவர்கள் வீடியோ எடுத்தது மட்டுமின்றி, வேறு யாரிடமாவது இதுகுறித்து கூறினால் இதனை பரப்பிவிடுவோம் என மிரட்டி உள்ளனர். மேலும் அவர்களின் எதிர்காலத்தையே பாழாக்கிவிடுவோம் என மிரட்டியிருக்கின்றனர்.

இந்தச் சூழலில் சீனியர் மாணவர்கள் ஜூனியர்களிடம் மது குடிக்க பணம் கேட்டு துன்புறுத்தியுள்ளனர். இந்தக் கொடுமைகளை தாங்க முடியாத ஒரு மாணவர், தனது தந்தையிடம் தகவல் தெரிவித்துள்ளார். அதன்பிறகே இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தற்போது அந்த 5 சீனியர் மாணவர்களும் விசாரணையில் உள்ளனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, கொச்சியில் 15 வயது பள்ளி மாணவர் ஒருவர் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. பள்ளியில் பிற மாணவர்கள், அந்த மாணவனை மிகவும் கொடுமைப்படுத்தியதால்தான் தனது மகன் இந்த முடிவுக்கு வந்திருக்கிறான் என அவரது தாயார் குற்றஞ்சாட்டியிருந்தார்.

இந்தச் சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை உண்டாக்கிய நிலையில், தற்போது கல்லூரி ஒன்றில் நடந்த கொடூரமான ராகிங் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.