மாநிலங்கள் பேச்சுரிமைகளை இரும்புக் கரங்களை கொண்டு ஒடுக்குவதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர் தெரிவித்துள்ளார்.
"பேச்சுரிமையும் நீதியும்" என்ற தலைப்பில் நடைபெற்ற இணையவழி கருத்தரங்களில் பேசிய மதன் பி லோகுர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக்கொண்டார். அப்போது "இப்போது நிறைய பேர் மீது தேசத் துரோக வழக்கு போடப்படுவது அதிகரித்து இருக்கிறது. ஒரு சாதாரண குடிமகன் எந்தவொரு கருத்தை தெரிவித்தாலும் அவர் மீது தேசவிரோதச் சட்டம் பாய்கிறது. பல மாநிலங்கள் கருத்துரிமையையும் பேச்சுரிமையையும் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்குகிறது. ஒரு குடிமகனை பேசவே கூடாது என்ற ரீதியில் அதிகபிரசங்கித்தனமாக அரசுகள் செயல்படுவதாகவே நினைக்கிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் "பேச்சுரிமைகளை ஒடுக்குவதற்கு தேசத் துரோக வழக்கு போடுவதைப் போல. இப்போதெல்லாம் பொய்யான செய்திகளை பரப்புகிறார்கள் என கூறி வேறு வழக்குகள் போடப்படுகிறது. இந்தக் கொரோனா காலத்தில் பல பத்திரிக்கையாளர்கள் வெண்ட்டிலேட்டர்கள் குறைப்பாடு, பலி எண்ணிக்கை சில தகவல்களை வெளியிட்டதற்காக அவர்கள் மீது பொய் செய்திகள் பரப்பியதற்கான வழக்குகள் போடப்பட்டுள்ளன" என்றார் மதன் பி லோகுர்.
மேலும் பேசிய அவர் "பிரசாந்த் பூஷன் விவகாரத்தில் கூட அவர் சொல்ல வந்ததை சரிவர எடுத்துக்கொள்ளப்படவில்லை. சட்ட அமைப்பு மீது எந்தவொரு வன்மத்தையும் அவர் மேற்கொள்ளவில்லை. அவர் நீதித்துறை மீது தன்னுடைய கருத்தை மட்டுமே சொன்னார். பலரும் வன்முறை குறித்தும் சட்டத்தை உடைப்பது குறித்தும் வெளிப்படையாகவே பேசுகின்றனர். ஆனால் அவர்களுக்கெல்லாம் எந்த வழக்கும் பாய்வதில்லை" என்றார் மதன் பி லோகுர்.