சென்னை உயர் நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு மாநில உயர் நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழிகளை அலுவல் மொழியாக பயன்படுத்த இயலாது என மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
திமுக மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் எழுத்து மூலம் இந்தப் பதிலை அளித்துள்ளார். தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளை அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களில் அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கெனவே இருந்ததாகவும் ஆனால் இதற்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என 1965-ம் ஆண்டே மத்திய அமைச்சரவை தெரிவித்துவிட்டதாகவும் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.
இந்நிலையில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்கும் கோரிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றதாகவும் இதன் பின் இவற்றுக்கு ஒப்புதல் தரமுடியாது எனக் கடந்த 2016-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தெரிவித்துவிட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார். தமிழ் உள்ளிட்ட சில மாநில மொழிகளில் உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்புகளை வெளியிடத் தொடங்கியுள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது