sikkim flood
sikkim flood Twitter
இந்தியா

சிக்கிமில் மேகவெடிப்பால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு.. 102 பேரை காணவில்லை என அரசு தகவல்!

webteam

மேகவெடிப்பு காரணமாக பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ள சிக்கிம் மாநிலத்தில் 14 பேர் உயிரிழந்தனர். ராணுவ வீரர்கள் 22 பேரை காணவில்லை என அறிவித்து தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இமயமலைத்தொடரில் அமைந்துள்ள சிக்கிம் மாநிலம் அவ்வப்போது இயற்கை பேரிடரில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த வகையில் வடக்கு சிக்கிமில் மேகவெடிப்பு காரணமாக பெய்த கனமழை மற்றும் தீஸ்தா ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையை நிலை குலையச் செய்துள்ளது. முழுவதுமாக நிரம்பிய சுங்தாங் அணையில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறியதும் ஆற்றில் வெள்ளப்பெருக்குக்கு காரணமாக அமைந்தது.

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அதேநேரம் ராணுவ வீரர்கள் 22 பேர் உள்பட 102 பேரை காணவில்லை என்றும், 2,011 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் சிக்கிம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. தண்ணீர் வேகமாக பாய்ந்தோடியதால் காணாமல் போனவர்களை ஆற்றின் தாழ்வான பகுதிகளில் தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

வெள்ளப்பெருக்கால் 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், அங்கு 20 நிவாரண முகாம்கள் அமைத்து ஆயிரக்கணக்கான மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் பிரேம் சிங் தமாங், கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள சிங்டாம் பகுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். வெள்ளப்பெருக்கு காரணமாக 11 பாலங்கள், குடிநீர் குழாய்கள், 227 வீடுகள் முற்றிலும் சேதமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.