மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி Pt web
இந்தியா

இண்டியா கூட்டணி தலைமை |முன்மொழியப்படும் ஸ்டாலின், மம்தா பெயர்கள்!

'இண்டியா' கூட்டணியில் தலைமை மாற்றம் குறித்த விவாதம் மீண்டும் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜிக்குத் தலைமைப் பொறுப்பை வழங்க வேண்டும் என உத்தவ் சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

Premkumar S

இண்டியா கூட்டணியின் தலைமை மாற்றம் குறித்து உத்தவ் சிவசேனா கட்சி மம்தா பானர்ஜி மற்றும் ஸ்டாலின் பெயர்களை முன்மொழிந்துள்ளது. இந்த நிலையில், இண்டியா கூட்டணியின் தலைமை மாற்றம் பற்றிய விவாதம் தேசிய அரசியலில் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது.

ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள், ’இண்டியா’ என்ற பெயரில் கூட்டணியைக் கட்டமைத்து தேர்தலைச் சந்தித்து வருகின்றன. இக்கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமாக தலைமை இல்லை எனினும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியே இண்டியா கூட்டணியை ஒங்கிணைக்கும் ஒற்றை முகமாக இருந்து வருகிறார். இந்த சூழலில்தான், 2024 மக்களைவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அக்கூட்டணியில் உள்ள கட்சிகளிலிருந்து தலைமை மாற்றம் என்ற நிலைப்பாடுகள் எழத் தொடங்கின. இதற்கிடையில், இண்டியா கூட்டணியை வழிநடத்த மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான் சரியான நபர் என அவரின் கட்சிக்கு உள்ளேயும், வெளியேயும் பரவலாக குரல்கள் எழுந்து வருகின்றன.

உத்தவ் தாக்கரே

இதை வலியுறுத்தும் வகையில் இன்று, மகாராஷ்டிரா மாநிலத்தைச் சார்ந்த உத்தவ் சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ பத்திரிக்கையான சாம்னாவில் வெளியிடப்பட்டுள்ள தலையங்கம் இண்டியா கூட்டணி தலைமை குறித்தான பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. அதில், ”இண்டியா கூட்டணியின் தலைமை பற்றாக்குறையை இனி புறக்கணிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி தனது உள்விவகாரங்களிலும், கேரளா மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் கூட்டணிகளுக்கு இடையேயேயும் போட்டியிடுவது பாஜகவிற்கே சாதகமாக முடியும். இனி தேர்தல் காலங்களில் மட்டுமே கூட்டணி குறித்துப் பேசுவது சரியாக இருக்காது. உணர்வுப்பூர்வமாக ஒன்றிணைந்து செயல்படுவது அவசியம். எனவே, இண்டியா கூட்டணிக்கு ஸ்டாலின் அல்லது மம்தா பானர்ஜி போன்ற வலிமையான தலைவர்கள் தலைமையேற்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.

ஏற்கனவே, இரண்டு நாட்களுக்கு முன்பு பேசியிருந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் சிறந்த தலைவர். அவரே தகுதியானவர்” எனத் தெரிவித்திருந்தார்.

மு.க. ஸ்டாலின், மம்தா பானர்ஜி

இந்தக் கருத்து பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், இன்று உத்தவ் சிவசேனா கட்சியும் அதே கருத்தை முன்னிறுத்தியிருக்கிறது. இவ்வாறு, இண்டியா கூட்டணியை ஒருங்கிணைக்க ஸ்டாலின், மம்தா பெயர் முன்மொழியப்பட்டு வருவது தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கபடுகிறது.