மக்களவையின் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் ஆந்திரா, அருணாசலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கான வேட்புமனுத்தாக்கலும் இன்று தொடங்குகிறது.
17-வது மக்களவையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டமாக உத்தரபிரதேசம், பீகார், மேற்குவங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் அந்தமான், சண்டீகர், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 மக்களவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிக்கை இன்று வெளியிடப்படுகிறது. இதைத் தொடர்ந்து வேட்மனுத்தாக்கலும் தொடங்குகிறது.
மார்ச் 25 ஆம் தேதி வேட்புமனுக்களை அளிப்பதற்கு கடைசி நாளாகும். மார்ச் 26 ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு மார்ச் 28 ஆம் தேதி கடைசி நாளாகும். முதல் கட்ட மக்களவைத் தேர்தலோடு, ஆந்திர பிரதேசம், அருணாச்சலபிரதேசம், சிக்கிம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், ஒடிசா மாநிலத்தில் உள்ள 147 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 28 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதேபோல காலியாக உள்ள 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது. தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.