இந்தியா

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கற்கள் வீசி இலங்கை கடற்படை தாக்குதல்: மீனவர்கள் சிறைபிடிப்பு

Veeramani

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் மீது கடந்த 12 மணி நேரத்தில் இலங்கை ராணுவம் இரண்டு முறை தாக்குதல் நடத்தியுள்ளது. 

நேற்று காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து சுமார் 600க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 3,500க்கும் மேற்பட்ட மீனவர்கள், மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இவர்கள் மாலை 5 மணியளவில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது 3 அதிவிரைவு கப்பலில் வந்த இலங்கை இராணுவத்தினர் மீனவர்கள் மீதும் படகுகள் மீதும் சரமாரியாக கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் வீசி எறிந்து விரட்டியடித்து சித்ரவதை செய்ததுடன், இரண்டு படகுகளையும், படகிலிருந்த 15க்கும் மேற்பட்ட மீனவர்களை கைது செய்தனர். இதனால் உயிருக்கு பயந்து மீனவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

அதேபோல இன்று அதிகாலை மீனவர்கள் கரைதிரும்பும் போது மீண்டும் கடற்படையினர் மீன்பிடி உபகரணங்களையும், படகுகளையும் சேதப்படுத்தி விரட்டியடித்தனர்.

இதனால் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு கரைதிரும்பினர். மேலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களின் நிலை குறித்து தகவல் இன்றி உறவினர்களிடையே பதட்டம் ஏற்பட்டுள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இலங்கையில் உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்தி சுமூக உறவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கூறிய நிலையில் 12மணி நேரத்தித்குள் இரண்டு முறை தமிழக மீனவர்கள் மீது நடந்தேறிய இந்த தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது என அனைத்து மீனவ அமைப்புகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.