ஸ்காட்லாந்து கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில் இந்தியா 30 பதக்கங்களுடன் 6வது இடத்தில் உள்ளது. ஈட்டி எறிதலில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா 85.83 மீட்டர் எறிந்து சீசனின் சிறந்த சாதனையைப் பதிவு செய்தும் வெள்ளிப் பதக்கமே பெற்றார். 23 வயது இலங்கை வீரர் ரூமேஷ் தரங்கா பத்திரகே 89.75 மீட்டர் எறிந்து தங்கம் வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில், 8 தங்கம், 15 வெள்ளி மற்றும் 7 வெண்கல பதக்கங்களை வென்றிருக்கும் இந்தியா பட்டியலில் 30 பதக்கங்களுடன் 6வது இடத்தில் நீடிக்கிறது. தொடர்ந்து இந்திய வீரர்கள், வீராங்கனைகள் தங்களுடைய அபாரமான திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஈட்டி எறிதல் விளையாட்டில் டோக்கியோ ஒலிம்பிக் சாம்பியனான இந்தியாவின் நீரஜ் சோப்ரா கலந்துகொண்டார். அவரிடமிருந்து இந்தியாவிற்கு தங்கம் வரும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், தனது இரண்டாவது முயற்சியில் 85.83 மீட்டர் தூரம் எறிந்து, இந்த சீசனின் சிறந்த எறிதலை நிலைநிறுத்தினார். ஆனால் அவரால் இரண்டாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
23 வயதேயான இலங்கையின் ரூமேஷ் தரங்கா பத்திரகே கடினமான குளிரை எதிர்கொண்ட போதிலும், தனது இரண்டாவது சுற்றில் 89.75 மீட்டர் தூரம்வரை எறிந்து தங்கப் பதக்கத்தைக் தட்டிச்சென்றார். இதன்மூலம் நீரஜ் இரண்டாம் இடத்திற்குத் தள்ளப்பட்டார்.
இந்நிலையில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜை தோற்கடித்தது இலங்கையை சேர்ந்த கிரிக்கெட் வீரர் என்பது தெரியவந்துள்ளது. ரூமேஷ் தரங்கா தொடக்கத்தில் தன்னுடைய கரியரை கிரிக்கெட் வீரராகவே தொடங்கியுள்ளார். 2012-ல் வேகப்பந்துவீச்சாளராக தன்னுடைய கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய அவர், 135 கிமீ வேகத்தில் வீசக்கூடியவர். பின்னர் ஈட்டி எறிதல் வீரராக மாறியவர் காமன்வெல்த் விளையாட்டில் 89.75 மீட்டர் தூரம்வரை எறிந்து இலங்கை நாட்டிற்கு தங்கம் வென்றுகொடுத்து சாதனை படைத்துள்ளார். 20 வருடத்தில் இலங்கைக்கு கிடைத்திருக்கும் முதல் தங்கம் இதுவாகும். கடைசியாக 2006 காமன்வெல்த் போட்டியில் இலங்கை தங்கம் வென்றிருந்தது.