இந்தியா

டயர் வெடித்ததால் பரபரப்பு: அவசரமாக தரையிறங்கியது ஸ்பைஸ்ஜெட் விமானம்

டயர் வெடித்ததால் பரபரப்பு: அவசரமாக தரையிறங்கியது ஸ்பைஸ்ஜெட் விமானம்

webteam

துபாயில் இருந்து வந்த ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால், ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. 

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம், இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. துபாய், இலங்கை, தாய்லாந்து உட்பட வெளிநாடுகளுக்கும் விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு எஸ்ஜி 58 என்ற எண் கொண்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் 189 பயணிகள் இருந்தனர்.

ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே வந்ததும் விமானி, டயரை இறக்கினார். அப்போது டயர் திடீரென வெடித்தது. இதையடுத்து ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு விமானி தகவல் தெரிவித்தார். இதனால் அவசரமாக அந்த விமானம் தரையிறங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்படி விமானம் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.