இந்தியாவில் கொரோனா தொடரின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதுதான் நோய் தொற்று பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கான ஒரே வழி என வல்லுனர்கள் சொல்லி வருகின்றனர். இந்நிலையில் வரும் 17-ஆம் தேதி முதல் தங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளது ஸ்பைஸ்ஜெட்.
இந்தியாவின் பட்ஜெட் ரக தனியார் விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டில் சுமார் 15000 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
“தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஊழியர்களுக்கு பணியில் பிரதிநிதித்துவம் கொடுக்கப்படும். ஏன் என்றால் எங்களது ஊழியர்கள் மற்றும் பயணிகளின் ஆரோக்கியத்தில் எங்களுக்கு அக்கறை உள்ளது. கொரோனாவை வீழ்த்த தடுப்பூசி தான் தேர்வு என கருதுகிறோம்.
இதனை நடைமுறை படுத்துவதற்கான செயல்திட்டத்தையும் நாங்கள் வகுத்துள்ளோம். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தடுப்பூசி செலுத்துவோம்” என ஸ்பைஸ்ஜெட் நிறுவன தலைவரும், நிர்வாக இயக்குனருமான அஜய் சிங் தெரிவித்துள்ளார்.