இந்தியா

நாகலாந்து: சிறப்பு ஆயுதப்படை சட்டம் மேலும் 6 மாத காலம் நீட்டிப்பு

Veeramani

நாகலாந்தில் அமலில் உள்ள "சிறப்பு ஆயுதப்படை சட்டம்" இன்று முதல் மேலும் 6 மாத காலம் நீட்டிப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் அரசிதழில் வெளியிட்டுள்ளது

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்து அமைதி சீர் குலைந்த மற்றும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் கருதுகிறது. இதன் காரணமாக "நாகாலாந்து" மாநிலம் முழுவதையும் உள்ளடக்கிய பகுதி மிகவும் குழப்பமான மற்றும் ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் இதனால் அங்கு வாழும் மக்களுக்கு பாதுகாப்பாகவும், உதவியாகவும் இங்கு ஆயுதப்படைகளைப் பணியில் உள்ளனர்.

ஆகவே,1958 ஆம் ஆண்டின் ஆயுதப்படைகள் சிறப்பு அதிகார சட்டத்தின் பிரிவு 3ன் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன்படுத்தி, நாகாலாந்து மாநிலம் முழுவதும் 'தொந்தரவுகள் நிறைந்த பகுதி' என்று மத்திய அரசு அறிவித்து கடந்த 2021 டிசம்பர் 30ம் தேதி அதாவது இன்று முதல் மேலும் 6 மாத காலத்திற்கு நீடித்து மத்திய அரசு அரசிதழில் வெளிட்டுள்ளது.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், தனிநாடு கோரிக்கையை முன்வைத்து போராடிவரும் நாகா படையினருக்கும், இந்திய அரசுக்கும் இடையே நீண்ட ஆண்டுகளாக மோதல் நீடித்துவருகிறது. இதனால் அம்மாநிலத்தில் 1963 ஆம் ஆண்டு முதல் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. ஆகஸ்ட் 3, 2015 அன்று மத்திய அரசு மற்றும் நாகா கிளர்ச்சிக் குழுவின் என்.எஸ்.சி.என்-ஐ.எம் பொதுச் செயலாளர் துங்கலெங் முய்வா ஆகியோருக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால் அதன்பின்னரும் இச்சட்டம் இதுவரை திரும்பப் பெறப்படவில்லை; இந்நிலையில் 1963ம் ஆண்டு முதல் நாகாலாந்தில் அமலில் உள்ள "ஆயுதப்படைகளின் சிறப்பு அதிகார சட்டம்" டிசம்பர் 30ம் தேதி, அதாவது இன்று முதல் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தை ‘தொந்தரவு நிறைந்த பகுதி’யாகவும் அரசு அறிவித்திருக்கிறது.

இச்சட்டத்தின் மூலம் நாகலாந்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் அதிகாரம் ராணுவத்திடம் இருக்கும். இதனால் அப்பகுதியில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடினால் கைதுசெய்ய முடியும், இச்சட்டத்தை மீறும் நபருக்கு ராணுவம் எச்சரிக்கை கொடுத்தும் இணங்காவிட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தலாம். சோதனை ஆணை இல்லாமலே எந்த இடத்திலும் சோதனை செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.