சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதியே கூட்டணி அமைத்துள்ளதாகவும் நாட்டு நலனை கருதி அல்ல என்றும் மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மக்களவை தேர்தலை கூட்டணி அமைத்து சந்திக்க உள்ளதாக சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் அறிவித்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
மோடியின் ஆட்சியால் நாட்டின் நிலைமை மோசமடைந்து வருவதாகவும் அந்தக் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர விடாமல் தடுக்கவே தங்கள் இரு கட்சிகளும் கைகோர்த்துள்ளதாகவும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி அறிவித்தார்.
தங்கள் கூட்டணியால் இந்தியாவில் புதிய அரசியல் புரட்சியே ஏற்பட உள்ளதாவும் இரு கட்சிகளும் தலா 38 தொகுதிகளில் போட்டியிடும் என்றும் தெரிவித்தார். மேலும் அமேதி, ரேபரேலி ஆகிய இரு தொகுதிகளில் மட்டும் போட்டியிடாமல் விலகியிருக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், உத்தரப்பிரதேசத்தில் உருவான கூட்டணியால் தேர்தல் முடிவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது எனவும் தேர்தல் என்பது கணக்கு அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் என்பது மனங்களை ஈர்க்கும் ரசாயனம் எனவும் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தங்கள் அரசியல் எதிர்காலத்தை கருதியே கூட்டணி அமைத்துள்ளதாகவும் நாட்டு நலனை கருதி அல்ல என்றும் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.