Sonam Wangchuk web
இந்தியா

”ஆவியாக வருவேன்..” டெல்லியில் உண்ணாவிரதத்தைத் தொடரும் சோனம் வாங்சுக்!

டெல்லியில் உண்ணாவிரதம் இருந்துவரும் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக், ’ஜூலை 20 அன்று, நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான பேரணி நடத்தவிருக்கும்வரை தாம் உயிரோடு இருப்பேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Prakash J

நீட் (NEET) தேர்வு முறைகேடு புகார்கள் மற்றும் வினாத்தாள் கசிவு விவகாரங்களுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் லடாக்குக்கு பழங்குடி மாநில அந்தஸ்து மற்றும் அரசமைப்புச் சட்டத்தின் ஆறாம் அட்டவணைப் பாதுகாப்பை வலியுறுத்தியும் தொடர்ந்து 20ஆவது நாளாக டெல்லியில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்கிறார் சமூக ஆர்வலரான சோனம் வாங்சுக். இதற்கிடையே வாங்சுக்கின் உடல்நிலை மோசமடைந்து வருவதால், பல்வேறு தரப்பினரும் அவரது உண்ணாவிரதத்தை முடிவுக்குக் கொண்டுவருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Sonam Wangchuk

இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்திலும் மனு அளிக்கப்பட்டிருந்தது. அதன் விசாரணையின்போது, ’சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை அரசு மருத்துவர்கள் தினசரி கண்காணிக்க வேண்டும் என்றும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்றும் டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது. இருப்பினும், இன்றுவரை அவர் தனது உண்ணாவிரதத்தைக் கைவிடவில்லை.

இதற்கிடையே தனது ஆதரவாளர்களிடையே பேசிய சோனம் வாங்க்சுக், “உங்கள் அனைவருடனும் சேர்ந்து நாடாளுமன்றத்திற்குப் பேரணி செல்வதற்காக, ஜூலை 20 வரை நான் எப்படியாவது உயிரோடு இருப்பேன். ஜூலை 20 அன்று நமது பேரணி வெற்றி பெறவில்லை என்றால், நான் ஒரு பேயாகத் திரும்பி வருவேன். நான் வெளித்தோற்றத்தில் பலவீனமானவன், ஆனால் உள்ளுக்குள் மிகவும் வலிமையானவன். உங்கள் அனைவருமே உள்ளுக்குள்ளும் வெளியிலும் வலிமையானவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். ஜூலை 20 அன்று, நாம் நாடாளுமன்றத்தை நோக்கி அமைதியான பேரணி நடத்தவிருப்பதால், இந்த ஆற்றல் நமக்குத் தேவைப்படுகிறது. நாம் அனைவரும் ஒன்றாகச் சென்று, ஜனநாயகத்தின் கோவிலில் நமது கோரிக்கையை முன்வைப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

Sonam Wangchuk

கல்வி முறையில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி வாங்சுக் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தப் போராட்டத்தை, கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நடத்தி வருகிறது. டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெறும் போராட்டம் இன்றுடன் 28-ஆவது நாளை எட்டியுள்ளது. ஜூலை 20ஆம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கும் எனக் கருதப்படும் நிலையில், அன்றைய நாளில், இப்போராட்டக் குழுவினர் நாடாளுமன்றத்திற்கு பேரணியாகச் செல்ல இருக்கின்றனர்.