இந்தியா

”என் மனைவியை கவர்ந்து சென்றுவிட்டார்” - தந்தைக்கு எதிராக போலீசிடம் மகன் பரபரப்பு புகார்!

JananiGovindhan

தந்தையே தனது மனைவியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிச் சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் மகன் ஒருவர் புகார் கொடுத்திருக்கும் சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது.

ராஜஸ்தானின் பூந்தி மாவட்டத்தில் உள்ள சாதர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிலோர் கிராமத்தில்தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட மகனும் கணவனுமான பவன் வைராகி தனது மனைவியுடன் ஓடியதற்காக தந்தை ரமேஷ் வைராகி மீது போலீசிடம் புகார் கொடுத்திருக்கிறார்.

அதில், தனது மனைவியை கவர்ந்து தன்னுடைய அழைத்துச் சென்றதாக தந்தை ரமேஷ் மீது பவன் வைராகி குற்றஞ்சாட்டியிருக்கிறார். தனக்கு 6 மாத பெண் குழந்தை இருப்பதாகவும், தொடக்கத்தில் தனது மனைவியிடம் தகாத முறையில் தந்தை ரமேஷ் நடந்துக்கொண்டதாகவும் கூறியிருக்கிறார்.

மேலும், மனைவியுடன் செல்லும் போது தனது இருசக்கர வாகனத்தையும் திருடிக்கொண்டு சென்றுவிட்டார் என்றும் பவன் வைராகி குறிப்பிட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து, தனது மனைவி அப்பாவி எனக் கூறியுள்ள பவன், தந்தை ரமேஷ்தான் தந்திரமாக அவரை கவர்ந்திருக்கிறார் என்று தெரிவித்திருக்கிறார்.

பவனின் இந்த புகாரை முதலில் முறையாக கையாளவில்லை என்றும் அவர் சாடியிருந்தார். ஆனால் இது குறித்து பேசியிருக்கும் சாதர் காவல் நிலைய அதிகாரி அர்விந்த் பரத்வாஜ், “இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். முழு வீச்சில் தப்பியவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம்.

பவன் வைராகியின் பைக்கையும் சேர்த்தே தேடி வருகிறோம். ஆனால் இதுவரை அவர்கள் இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.” எனத் தெரிவித்திருக்கிறார்.

முன்னதாக இதேப்போன்ற ஒரு சம்பவம் கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தானிலேயே அரங்கேறியிருக்கிறது. அதன்படி சிரோஹி மாவட்டத்தில் 40 வயதுடைய மாமியார் ஒருவர் 27 வயதுடைய மருமகனுடன் வீட்டை விட்டு சென்றிருக்கிறாராம்.

குறிப்பாக மாமனார் ரமேஷ் என்பவருக்கு மது விருந்து கொடுத்து போதையாக்கிவிட்டு நாராயண் ஜோகி என்ற அந்த மருமகன் தனது மாமியாருடன் தப்பியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.