இந்தியா

''மனித உரிமைகள் விவகாரத்தில் பாரபட்ச அணுகுமுறை கூடாது' - பிரதமர் மோடி

கலிலுல்லா

மனித உரிமை விவகாரத்தில் பாரபட்சமான அணுகுமுறை ஜனநாயகத்திற்கு தீங்கு விளைவிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 28 ஆவது நிறுவன தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், மனித உரிமை என்பதை சிலர் லாபத்திற்காக அணுகும் போக்கை கடைபிடிப்பதாக கூறினார். ஒரு சம்பவத்தில் மனித உரிமை மீறலைப் பார்க்கும் சிலர், மற்றொரு சம்பவத்தில் அதை கண்டுகொள்வதே இல்லை எனவும் தெரிவித்தார்.

மேலும், இத்தகைய மனப்பாங்கு மனித உரிமைகளை வெகுவாக பாதிக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். அரசியல் லாப நோக்கங்களுக்காக மனித உரிமைகளை அணுகும்போது, மனித உரிமையுடன் ஜனநாயகமும் பாதிக்கப்படுகிறது என்றும் பிரதமர் கூறினார். ஏழைகள், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுவதற்காக மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளையும் பிரதமர் மோடி பட்டியலிட்டார்.