காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பதிலடி தர நமது படைகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் மாநிலம் ஜம்முவில் இருந்து நேற்றுமுன் தினம் 78 வாகனங்களில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மத்திய ரிசர்வ் பாதுகாப்புப் படையினர் பயணம் செய்தபோது, புல்வாமா மாவட்டத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலை பாகிஸ்தானில் இருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பு செயல்படுத்தியுள்ளது.
இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளங்களில் மக்கள் கோபத்துடன் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மகாராஷ்டராவில் பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை தொடக்கி வைத்தார். பின்னர், யவத்மாலில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நமது வீரர்களை தாக்கியவர்கள் எங்கு ஒளிந்திருந்தாலும் தண்டனை பெறுவது நிச்சயம் என்று தெரிவித்தார். காஷ்மீர் தாக்குதலைப் பார்த்து வேதனையில் தவிக்கும் மக்களின் மனநிலை தனக்கு புரிவதாகவும் வீரர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினரின் துயரத்தையும் கோபத்தையும், தான் உணர்வதாகவும் பிரதமர் கூறினார்.
திவால் நிலையில் தத்தளித்து வரும் ஒரு நாடு பயங்கரவாதத்தின் மறுபெயராக திகழ்வதாக பிரதமர் மோடி பாகிஸ்தானை பெயர் குறிப்பிடாமல் சாடினார். மேலும் காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு பதிலடி தர நமது படைகளுக்கு முழு சுதந்திரம் தரப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.