sugar ani
இந்தியா

டீ, காபி பிரியர்களுக்கு ஷாக்? அதிரவைக்கும் சர்க்கரை விலை.. E20 பெட்ரோல் திட்டம்தான் காரணமா?

ஒரே மாதத்தில் சர்க்கரை விலை எதிர்பாராத அளவுக்கு கிடுகிடுவென உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

காலை எழுந்து குடிக்கும் டீ முதல் பல்வேறு உணவுப் பொருட்கள் தயாரிப்பது வரை சர்க்கரை முக்கிய மூலப்பொருளாக உள்ளது. அன்றாட வாழ்க்கையில் சர்க்கரை ஓர் அங்கமாகவே மாறிவிட்டது என்றுகூடச் சொல்லலாம். சர்க்கரைக்கு மாற்றாக கருப்பட்டி, நாட்டுச் சர்க்கரை போன்றவை இருந்தாலும், அவற்றின் விலை சர்க்கரையைவிட பல மடங்கு அதிகம் என்பதால் சாமானிய மக்கள் பலரும் சர்க்கரையையே பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தற்போது சர்க்கரையின் விலை ஒரே மாதத்தில் கிடுகிடுவென உயர்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ சர்க்கரை ரூ.47-க்கு விற்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தற்போது அதன் விலை ரூ.60-ஐத் தாண்டி விற்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

E20 PETROL

ஓணம், ஜென்மாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, தீபாவளி என அடுத்தடுத்து பண்டிகைக் காலங்கள் வருவதால், சர்க்கரையின் தேவை அதிகரித்து, விலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. பிரேசிலுக்கு அடுத்தபடியாக, உலகிலேயே அதிக அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இருந்தபோதிலும், சர்க்கரை விலை உயர்வு சாமானிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெட்ரோலில் எத்தனால் கலப்பது அதிகரிக்கப்பட்டதே சர்க்கரை விலை உயர்வுக்குக் காரணம் என்ற குற்றச்சாட்டும் எழுந்து வருகிறது. எத்தனால் உற்பத்திக்கு கரும்பின் தேவை அதிகரித்ததால் சர்க்கரை உற்பத்தி குறைந்து, விலையேற்றம் ஏற்பட்டுள்ளதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு மறுத்துள்ளது.

சர்க்கரை விலையேற்றத்திற்கு எல் நினோ தாக்கத்தால் இயல்பைவிட பருவமழை குறைந்ததும், இதனால் கரும்பு உற்பத்தி பாதிக்கப்பட்டதும் காரணமாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சர்க்கரை விற்பனையாளர்கள் தேவைக்கு அதிகமாக சர்க்கரையை வாங்கிப் பதுக்கி வைத்திருப்பதும் இந்த விலையேற்றத்திற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சர்க்கரை விலையேற்றம் குறித்து பேசியுள்ள தேசிய சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் தலைவர் பிரகாஷ் நாய்க்நவரே, 'தென் அமெரிக்க நாடான பிரேசில் மட்டுமே சர்க்கரை வாங்குவதற்கு உகந்த நாடாக உள்ளது. பிரேசிலில் இருந்து சரக்கு கப்பல்கள் சர்க்கரையை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும், அந்தக் கப்பல்கள் இந்தியாவை வந்தடைய 40 முதல் 45 நாட்கள் ஆகலாம்' என்றும் அவர் கூறியுள்ளார். அதன்பிறகு சர்க்கரை விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சர்க்கரையை தேவைக்கு அதிகமாகப் பதுக்கி வைத்துள்ளவர்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதால் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும், எனவே மக்கள் பயப்பட வேண்டியதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் அக்டோபர் மாதம்தான் கரும்பு அறுவடை காலம் என்பதால் அக்டோபர் மாதத்தில் சர்க்கரை உற்பத்தி அதிகரித்து, விலை குறைய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதே நிலை தொடர்ந்தால் டீ, காபி போன்ற உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.