இந்தியா

கர்நாடகா: ஆவணம் கேட்ட போலீஸிடம் ஐந்தடி பாம்பை காட்டி பதறவைத்த நபர்

Veeramani

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே அத்தியாவசியத் தேவைக்காகவே வெளியே வந்ததாக கூறிய பாம்பு பிடிக்கும் நபரிடம், காவல்துறையினர் முறையான ஆவணங்களைக் கேட்டபோது பிடித்து வந்த நல்ல பாம்பையே சாட்சியாக காட்டிய சம்பவம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்படுள்ள நிலையில் மைசூர் மாளிகை அருகே காவல்துறையினர் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி அதிகாரிகள் விசாரித்துள்ளனர். அத்தியாவசியத் தேவைக்காக வெளியே வந்ததாகக் கூறிய அந்த இளைஞரிடம் காவல்துறையினர் உரிய ஆவணங்களைக் காட்டுமாறு கராராக கேட்டுள்ளனர்.

குடியிருப்புகளுக்குள் புகும் பாம்புகளை மீட்கும் வீரரான அந்த இளைஞர், வேறு வழியின்றி பிடித்து வந்த நல்ல பாம்பையே இருசக்கர வாகனத்தில் இருந்து ஆவணமாக எடுத்துக் காட்டினார். ஆவணங்களைக் கேட்ட அதிகாரிகள் சுமார் ஐந்தடி பாம்பைக் கண்டதும் ஐந்தடி தெறித்து விலகினர்.