பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபீன் தலைமையில் புதிய தேசிய நிர்வாகிகள் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கட்சியின் தேசிய துணைத் தலைவர்களாக மொத்தம் 13 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். மூத்த தலைவர்களின் அனுபவத்தையும் புதிய நிர்வாகிகளின் ஆற்றலையும் ஒருங்கிணைக்கும் வகையில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன.
புதிய நியமனங்களின்படி, ராஜஸ்தான் முன்னாள் முதல்வரான வசுந்தரா ராஜே சிந்தியா, மீண்டும் தேசிய துணைத் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார். அதேபோல், ராம் மாதவ் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிலிருந்து பாஜகவின் தேசியப் பொறுப்பிற்கு மீண்டும் நியமிக்கப்பட்டு துணைத் தலைவராகியுள்ளார். ஒடிசாவைச் சேர்ந்த மூத்த தலைவரான பைஜயந்த் ஜெய்பாண்டா, தேசிய துணைத் தலைவராகத் தனது சேவையைத் தொடர்கிறார்.
இவர்களைத் தவிர, உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் தீரத் சிங் ராவத், ஆந்திராவின் டி.புரந்தேஸ்வரி, பஞ்சாபின் மன்பிரீத் சிங் பாடல் மற்றும் டாக்டர் பாரதி பிரவீன் பவார் ஆகியோர் துணைத் தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், 8 பேர் கொண்ட தேசிய பொதுச் செயலாளர்கள் பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி இணைந்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலத்தின் கட்சிப் பொறுப்புகளை கவனிக்கும் வகையில் இவர், தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவரைத் தவிர வினோத் தவாடே, சுனில் பன்சால், திரிபுரா முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப், சதீஷ் பூனியா, கஜேந்திர படேல், ஹரீஷ் திவேதி மற்றும் சஞ்சய் பாட்டியா ஆகியோரும் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். பி.எல். சந்தோஷ் தேசிய பொதுச் செயலாளர் (அமைப்புச் செயலாளர்) பொறுப்பில் தொடர்ந்து நீடிக்கிறார். மேலும், மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பாஜகவின் தேசியப் பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் தேசியச் செயலாளர்களாக கே. சுரேந்திரன், அனில் அந்தோணி மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த டாக்டர் எம். வெங்கடேசன் உட்பட 16 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.