இந்தியா

ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் மர்ம மரணம் ! ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்

jagadeesh

ஒடிசா மாநிலத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உயிரிழந்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ஒடிசா மாநிலத்தின் பாலங்கிர் மாவட்டத்தில் புலு ஜானி (50) அவரது மனைவி ஜோதி (48) மற்றும் இந்தத் தம்பதியினரின் இரு மகன்கள், இரு மகள்கள் ஆகியோர் மர்மமான முறையில் உயிரிழந்து தங்களது வீட்டில் சடலமாக கிடந்துள்ளனர். இவர்கள் அந்த மாவட்டத்தில் சன்ராபாடா என்ற கிராமத்தில் வசித்து வந்தனர்.

உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றிய ஒடிசா மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாட்னாகர் காவல் நிலையத்தின் ஆய்வாளர் பிரியங்கா ரூத்ரே "இது தற்கொலையா கொலையா என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. கைப்பற்றப்பட்டுள்ள சடலங்கள் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்பே இது கொலையா தற்கொலையா என்பது தெரிய வரும்" என கூறியுள்ளார்.

இந்தக் குடும்பத்தினர் கடந்த 10 ஆண்டுகளாக சன்ராபாடா கிராமத்தில் வசித்து வருகின்றனர். இவர்கள் தேனை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.