இந்தியா

மேற்கு வங்கத்தில் பயங்கரம்: பாஜக தொண்டர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - 6 பேர் காயம்

மேற்கு வங்கத்தில் பயங்கரம்: பாஜக தொண்டர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு - 6 பேர் காயம்

JustinDurai

மேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக தொண்டர்கள் மீது நாட்டு வெடிகுண்டு வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல், மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 29-ம் தேதி வரை எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து இரண்டு முறை ஆட்சியைப் பிடித்த நிலையில், மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் மம்தா பானர்ஜி தீவிரமாக இருக்கிறார். 

மேற்கு வங்கத்தில் 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்று இடங்களை மட்டுமே பிடித்த பாஜக, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 18 தொகுதிகளில் வெற்றி பெற்று மம்தாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. அதைத் தொடர்ந்து 2021 தேர்தலில் ஆட்சியைப் பிடித்துவிட வேண்டும் என்ற முனைப்பில் பாஜக தீவிரமாக களமிறங்கியுள்ளது. இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பா.ஜ.க.வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் பரப்புரையை தீவிரப்படுத்தி வருகின்றன. இதில் கட்சிகளுக்கு இடையேயான மோதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில், அம்மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் பாஜக தொண்டர்கள் சிலர் அப்பகுதியில் உள்ள ராம்பூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, நேற்றிரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அவர்களை வழிமறித்த சிலர் அவர்கள் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்த வெடிகுண்டு வீச்சு தாக்குதலில் பாஜக தொண்டர்கள் 6 பேர் படுகாயமடைந்தனர்.  காயமடைந்தவர்களில் 2 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

இந்தத் தாக்குதல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்களால் நடத்தப்பட்டது என பாஜக குற்றஞ்சாட்டி உள்ளது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.