பஞ்சாபி ராப் பாடகர்  சித்து மூஸ்வாலா, தன் குடும்பத்துடன்
பஞ்சாபி ராப் பாடகர் சித்து மூஸ்வாலா, தன் குடும்பத்துடன் முகநூல்
இந்தியா

‘மகனின் நினைவாக...’ - IVF மூலம் மீண்டும் கருத்தரித்துள்ளார் பாடகர் சித்து மூஸ்வாலாவின் தாய்!

ஜெனிட்டா ரோஸ்லின்

பிரபல பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா (28) கடந்த மே 29, 2022 அன்று தனது நண்பர் மற்றும் உறவினருடன் ஜீப்பில் பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர் கே கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கும்பலால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சித்து மூஸ்வாலாவின் தாயார் சரண் கவுர், உயிரிழந்த தன் மகனின் நினைவாக செயற்கை கருத்தரித்தல் முறையில் தற்போது மீண்டும் கருவுற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரண் கவுருக்கு இப்போது வயது 58.

சித்து மூஸ்வாலா - தன் தாயுடன்

தற்சமயம் வரை தாயும் சிசுவும் ஆரோக்கியமாக இருப்பதாகவும், அடுத்த மாதம் பிரசவம் நிகழும் என்றும் மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக பஞ்சாப் ஊடகங்கள் சில தெரிவித்துள்ளன.

சித்துவின் ரசிகர்கள், அவரது இறப்புக்கு நியாயம் கேட்டு தற்போதுவரை போராடிக் கொண்டிருக்கும் சூழலில் தற்போது அவரின் தாய் கருவுற்றிருப்பது ரசிகர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியுள்ளது. சித்துவே குழந்தையாக பிறப்பார் என்று சில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

சித்து மூஸ்வாலா இசைப்பிரியர் மட்டுமல்ல; அரசியல் களத்திலும் தனக்கென தடம் பதிக்க துடித்தவர். பஞ்சாபி ராப் பாடகரான இவருக்கு இந்தியாவை கடந்தும் ரசிகர்கள் உள்ளனர். தன் இறுதிநாள்களில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து ஆம் ஆத்மிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

சித்து மூஸ்வாலா

அச்சமயத்தில் நடந்த பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலின் போது ஆம் ஆத்மி வெற்றி பெறவே, பலருக்கு அளிக்கப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டது. அதில் பாதுகாப்பினை இழந்த 24 மணி நேரத்தில் அடையாளம் தெரியாத எதிரிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார் சித்து. முன்னதாக சித்துவுக்கும் அமன்தீப் கவுர் என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது; 2 வருடங்களாக காதலித்து வந்த அவர்கள் இருவரும் நவம்பரில் திருமணம் செய்துகொள்ளவிருந்தனர். அப்படியான நிலையில்தான் திடீரென அவரது மரணம் நிகழ்ந்தது. இது பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் தற்போது சித்துவின் தாய் கருவுற்றுள்ளார். இதையடுத்து தாயும் சேயும் நலமுடன் இருக்க பல்வேறு தரப்பினரும் வாழ்த்தி வருகின்றனர். 58 வயதில் கருவுற்றுள்ளார் என்பதால், சித்துவின் தாய் சரண் கவுர் இச்சமயத்தில் கூடுதல் கவனத்தோடு இருக்க பலர் அறிவுறுத்திவருகின்றனர்.